திமுகவை திடீரென கை கழுவிய பாமக.. அதிமுக பக்கம் அசால்ட் ஷிப்டிங்.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
Recommended Video
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில், திமுகவுடன் ஏன் கூட்டணி அமைத்துக் கொள்ளவில்லை என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதிமுகவுடன் இணைந்து வரும் லோக்சபா தேர்தலை சந்திப்பதற்கு பாமக தயாராகிவிட்டது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள், அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு, 7 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படும், என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
திடீர் கூட்டணி
பாமக மற்றும் அதிமுக நடுவேயான கூட்டணி என்பது நீண்டகாலமாக திட்டமிட்டு அமைக்கப்பட்டது கிடையாது. திடீரென்று, முடிவு செய்யப்பட்டது தான் என்கிறார்கள் இந்த விஷயத்தில் நெருக்கமானவர்கள். அதிமுக உடன் கூட்டணி உடன்படிக்கை ஏற்படுவதற்கு முன்பு வரை, திமுகவுடன் பாமக தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவ்வளவு ஏன்? நேற்று காலை, காங்கிரஸ் கட்சி செயல் தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார் அளித்த பேட்டியில் கூட, பாமக, திமுக கூட்டணிக்குத்தான் வரும் என்று மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
காங்கிரஸ் காட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அளித்த பேட்டியில், பாமகவிற்கு கொள்கை இருக்க வேண்டும். ஒரு பக்கம் திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு, மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது நல்ல அரசியல் கட்சிக்கு அழகு கிடையாது, என்று காட்டமாக தெரிவித்தார். இதன் மூலம் திமுகவுடன், பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்கள் உறுதி ஆகி விட்டன.
டீலிங் ஓகே
அதேநேரம், எதற்காக திமுக பக்கம் போகாமல் அதிமுக பக்கம் திடீரென பாமக வந்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. திமுகவைப் பொறுத்த அளவில் பாமகவிற்கு மொத்தம் மூன்று லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவதாக ஆஃபர் கொடுக்கப்பட்டதாம். ஆனால் அதிமுக தரப்பில் 7 லோக்சபா தொகுதிகளையும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா எம்பி பதவியையும் தருவதாகவும் கூறி உள்ளது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, தோற்றாலும் சரி நாடாளுமன்றத்திற்கு பாமக ஒரு எம்பியை அனுப்பி வைப்பது ராஜ்யசபா மூலமாக உறுதியாகிவிட்டது. "பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்று பாமக தலைமையும், இதற்காகத்தான், பச்சைக்கொடி காட்டி விட்டது.
இடைத் தேர்தல் முக்கியம் பாஸ்
அதிமுகவை பொறுத்தளவில் வரும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 21 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல் முடிவில்தான், அதிமுக ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பது தீர்மானிக்கப்படப் போகிறது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு பாஜக இப்போது போல அனுசரணையாக நடந்து கொள்ளுமா என்பதும் தெரியாது. எனவே முன்கூட்டியே இந்த இடைத் தேர்தலில் பாமக ஆதரவை கேட்டுப் பெற்று ஒப்பந்தத்தில் அது இடம்பெறுமாறு அதிமுக பார்த்துக்கொண்டது.
இரு தரப்புக்கும் லாபம்
இந்த ஷரத்து அதிமுகவுக்கு லாபம். இதற்காகத்தான் ராஜ்யசபா எம்பி பதவியை கூட தூக்கி வழங்குவதற்கு அந்த கட்சி முன்வந்தது. இருதரப்புக்கும் வெற்றி என்ற அளவில் இந்த டீல் இருந்ததால், இதற்கு பாமக தலைமையும், ஒப்புக் கொண்டுள்ளது. இது தவிர, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியுடன் கூட்டணி அமைப்பது, தேர்தல் செலவினங்களை ஈடுகட்டுவதற்கு உதவும் என்பதும் மற்றொரு திட்டமாக கூறப்படுகிறது.