தமிழக கடற்கரைகளில் இருந்து வட கொரியாவிற்கு ஏற்றுமதியான தாது, அணு ஆயுத மூலப்பொருளா? விசாரணை தீவிரம்
சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் ஒரு மணல் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் பிரமாண்ட ரெய்டு நடத்தினர்.
கடற்கரை மணலில் இருந்து தாதுக்களைப் பிரித்து எடுத்து அவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த வகையில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளது இந்த நிறுவனம்.
இதனால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் இந்த ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

அணு ஆயுத தாதுக்கள்
ஆனால், இது, வருமான வரி தொடர்பான சோதனையாக மட்டும் இல்லை என்கிறார்கள் மத்திய புலனாய்வு பிரிவில் உள்ள சில அதிகாரிகள். வருமான இழப்பு மட்டுமின்றி இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி ஒன்று உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து ஒரு அதிகாரி நம்மிடம் கூறும்போது, "இந்த நிறுவனம் அனுப்பக்கூடிய தாதுக்கள், வெறுமனே உபகரணங்களோ அல்லது வேறு தொழில்நுட்பங்களுக்கோ பயன்படுத்தப்பட்டிருந்தால் பிரச்சினை கிடையாது. ஆனால் யுரேனியம் உள்ளிட்ட சில தாதுக்கள் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படக்கூடியவை என்பதால், கண்காணிப்பு வளையத்திற்குள் இந்த நிறுவனம் வந்துள்ளது" என்கிறார்.

ஆந்திரா வழியாக
அதில் ஒரு அதிகாரி கூறிய தகவல் திடுக்கிடும் ரகம். ஆந்திராவில் உள்ள ஒரு துறைமுகம் வழியாக, தாதுக்கள் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். வடகொரியா ஏற்கனவே அணு ஆயுதத்தை வைத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்களில் கூட விரலைவிட்டு ஆட்டி வருகிறது. இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ள நிலையில் இது போன்ற தாதுக்களை வடகொரியாவுக்கு இந்திய நிறுவனம் ஒன்று அனுப்பியுள்ளது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறார். அதிகாரிகளுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் வெளியே வராமல் இருந்துள்ளது.

தொடர்புள்ள நிறுவனங்கள்
வெளியே கூறப்பட்டது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் வருமானவரி சோதனை என்பது மட்டும் தானே தவிர, வருமானவரி சோதனை என்பது நிறுவனத்தின் சகோதரர் நடத்தி வரும் மற்றொரு தாது மணல் நிறுவனத்திலும் நடந்துள்ளது என்கிறார்கள் களத்தில் உள்ள அதிகாரிகள். தாதுமணல் அலுவலகங்களை பூட்டி விட்டு அதன் மேலாளர்கள் தலைமறைவாகிவிட்டனராம்.

எஸ்கேப்பான மேனேஜர்கள்
மேலாளர்களை தொடர்புகொள்ள அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால் மேனேஜராக பணியாற்றியவர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சொந்த ஊர்களில் இல்லாமல் வேறு எங்கோ தலைமறைவாகியுள்ளனராம். இதனால் சில அலுவலகங்களில் பூட்டை உடைத்து உள்ளே நுழைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications