டெல்லியில் தொடரும் தமிழக மாணவர்களின் மரணங்கள்.. தலைநகரில் நடக்கும் திகில் சம்பவங்களால் ஷாக்!
சென்னை: டெல்லிக்கு படிக்க செல்லும் தமிழக மாணவர்களின் மரணங்களால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதுவும் மர்மமான முறையில் இறப்பது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போன்றவற்றால் தமிழக பெற்றோர் பெரும் பீதியில் உள்ளனர்.
தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள் இருந்தாலும் ஐஏஎஸ், மேற்படிப்பு, ஐஐடி, எய்ம்ஸ் கல்லூரிகளில் சேர்வது என தமிழக மாணவர்கள் பெரிதும் வட மாநிலங்களை நாடுவது அதிகரித்துள்ளது. ஒரு சில பாடப்பிரிவுகள் டெல்லியில் படித்தால்தான் நல்ல எதிர்காலம் என்று கூறிக் கொண்டு பல கனவுகளுடன் செல்லும் மாணவர்கள் கடைசியில் பிணமாக வருவதை பார்க்கும் பெற்றோர் கதறுகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஏன் இறக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான வடமாநில மாணவர்களின் இனவெறியினால் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி மன உளைச்சல் ஏற்பட்டு இறக்கிறார்கள் என்றே தெரிகிறது.

மனஉளைச்சல்
வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நமது மாநிலத்துக்கு வந்து நன்கு படிப்பது மற்ற மாணவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இவர்கள் ஓரின சேர்க்கை, கஞ்சா குடிப்பது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களை செய்ய சொல்லி வடமாநில மாணவர்களால் டார்ச்சர் செய்யப்பட்டு அதனால் மனஉளைச்சலால் இறக்கின்றனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முத்துகிருஷ்ணன்
இத்தகைய செயல்களை இவர்கள் செய்யாததால் கொலை செய்யப்பட்டு அவை மூடிமறைக்கப்படுகின்றனவா என்றும் தெரியவில்லை. டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் படித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியவில்லை.

சரத்பிரபு
டெல்லி பல்கலைக்கழகத்தின் யுசிஎம்எஸ்சி மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப்படிப்பு படித்துவந்த திருப்பூரைச் சேர்ந்த தமிழக மாணவர் சரத்பிரபு, இவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இவரது இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

கிருஷ்ண பிரசாத்
சண்டீகரில் பட்ட மேற்படிப்பிற்கான மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (பிஜிஐஎம்இஆர்) அமைந்துள்ளது. இதன் ஊடுகதிர் துறையில், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.கிருஷ்ண பிரசாத் (24). இவர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர். மாணவர் தங்கும் விடுதியில் கடந்த பிப்ரவரியில் தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீமதி
இதேபோல் டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்துக் கொண்டிருந்த சத்தியமங்கலம் ஸ்ரீமதி என்ற மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் மேற்படிப்புக்காக செல்லும் மாணவர்கள் மரணமடைவதால் தமிழகத்தில் பெற்றோர் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை
டெல்லியில் இறந்தவர்கள் அனைவருமே இறப்பதற்கு முன்னர் பெற்றோருடனும் உறவினர்களுடனும் நன்கு பேசியுள்ளனர். எந்த பிரச்சினைகளையும் கூறியதில்லை. அப்படியிருக்கையில் எப்படி தற்கொலை செய்து கொள்வர் என்ற கேள்வியை பெற்றோர் முன்வைக்கின்றனர். மேலும் ஏற்கெனவே நடந்த மர்ம மரணங்களில் மரணத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து தமிழக மாணவர்களுககு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications