சென்னையில் திடீர் பேய் மழை கொட்டி தீர்த்தது ஏன்?.. மேக வெடிப்பு காரணமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னை: நேற்று இரவு முதல் இன்று காலை வரை எதிர்பாராதவிதமாக சென்னையை பெரு மழை, வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நகரில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதுவடசென்னை மற்றும் தென் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றது.

எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை வானிலை மையமே எதிர்பார்க்காதது. தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருந்த சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையில் பேய் மழை பெய்யும் என எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.

வானிலை ஆய்வு மைய தலைவர் விளக்கம்
ஆனாலும் சென்னையில் பேய் மழை கொட்டி தீர்த்ததற்கு என்ன காரணம்? என்று தெரியாமல் மக்கள் குழம்பி உள்ளனர். சென்னையில் திடீர் கனமழை கொட்டியது ஏன்? என்பது குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்தர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

குறுகிய காலத்திலேயே மழை
சென்னைக்கு நேற்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை . திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டுமே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. . ஆனால் சென்னையில் குறுகிய காலத்திலேயே அதிக கனமழை பதிவாகியது. இரவு 10 மணி வரை 3 செ.மீ மழையும், 1 - 1.45 மணி வரை 6 செ.மீ மழையும்,5 - 6 மணிவரை 7 செ.மீ மழையும் பதிவாகியது.

மேக வெடிப்பு காரணமா?
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 23 செ.மீ மழை பதிவாகியது. மிகக் குறுகிய கால வானிலை மாற்றத்தை கணிப்பது கடினம். நேற்று காலையில் நாங்கள் வானிலை தகவல் கொடுக்கும்போது இது தெரியவில்லை. சில வானிலை மாற்றங்களை சில மணி நேரம் முன்பாகத்தான் கணிக்க முடியும். சென்னையில் பெரு மழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை. ஆனால் மேக வெடிப்பு போன்று கனமழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்தர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications