சென்னை மாகாணத்துக்கு 1967 ஜூலை 18-ல் தமிழ்நாடு என பெயர்- தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தின் பின்னணி இது!
சென்னை: சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த நாள் தமிழ்நாடு நாள் என தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு விடுதலைக்கு முன்னர் மாகாண அமைப்பு முறையே நடைமுறையில் இருந்தது. சென்னை மாகாணம் என்பது இன்றைய கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிஷா மாநிலங்களின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்து வந்தது. மாகாண அமைப்பு முறையானது பல மாநிலங்களாக 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் மாற்றி அமைக்கப்பட்டது. இதனடிப்படையில் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர 1-ந் தேதியை தங்களது மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றன.

மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர்களிலேயே அழைக்கப்பட்டு வந்தன. ஆகையால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று மாநிலங்கள் பிரிவினைக்கு முன்னரே 1955-லேயே தந்தை பெரியார் குரல் கொடுத்தார். 1956 அக்டோபரில் தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிர் நீத்தார்.
1961-ல் ராஜ்யசபாவில் பூபேஷ் குப்தா எம்.பி, தமிழ்நாடு என்று அழைக்க தனி நபர் மசோதா தாக்கல் செய்தார். ராஜ்யசபாவுக்கு சென்ற மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவும் Call my State TAMIL NADU என முழங்கினார். அதாவது என்னுடைய மாநிலத்தை தமிழ்நாடு என அழைக்க வேண்டும் என வலியுறுத்தி அண்ணா, ராஜ்யசபாவில் உரையாற்றினார்.
இதன்பின்னர் 1967-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரியணை ஏறியது. பேரறிஞர் அண்ணா முதல்வராக பதவி வகித்தார். அப்போது அதாவது 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி முதல்வர் அண்ணாவே, தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான தனி மசோதா கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார். அன்று முதல் சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என்பது அடியோடு ஒழிந்து தமிழ்நாடு என பெயர் சூட்டிக் கொண்டது இந்த மண்.
இதனால்தான் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாள் என கொண்டாட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனையே தமிழகமும் கடைபிடித்து வருகிறது.
இருந்த போதும் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் என்பதால் அந்த நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்கிற கருத்தும் தமிழகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications