நெஞ்சை உருக்கும் சம்பவம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐ.ஐ.டி.யில் இருந்து வாக்கிங்கை மாற்றியதன் பின்னணி!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐ.ஐ.டி.வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த வழக்கத்தை அடையாறு தியாசபிகல் சொசைட்டி வளாகத்துக்கு மாற்றியதன் பின்னணியில் நெஞ்சை நெகிழச் செய்யும் சம்பவம் இருக்கிறது என்கின்றனர் மூத்த திமுக நிர்வாகிகள்.
சென்னை அடையாறு ஆலமரம் அமைந்திருக்கும் தியாசபிகல் சொசைட்டி பகுதி மிகவும் பசுமையான பகுதி. சென்னை பெருநகரத்தில் இப்படி ஒரு பசுமையான சூழல் அபூர்வமானதுதான்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இந்த தியாசபிகல் சொசைட்டி வளாகத்தில் பலரும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஸ்டாலின் உரையாடல் வீடியோ
இன்று காலையில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்ட போது பொதுமக்களுடன் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ ஊடகங்களில் வெளியானது. முதல்வரின் எளிமையை சிலாகித்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஐஐடி வளாக நடைபயிற்சி
முன்பு எல்லாம் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் துள்ளி ஓடும் மான்களின் பயணங்களுக்கு நடுவேதான் முதல்வர் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்வார். 2015-ம் ஆண்டு சென்னை நாளின் போது தமது முகநூல் பக்கத்தில், மெரீனா கடற்கரையில் சூரிய உதயத்தை ரசித்தது, மிகச்சிறந்த உள்ளூர் பில்டர் காபியை காலை வேளையில் அருந்தியது அல்லது ஐ.ஐ.டி-யின் பசுமையான சுற்றுப்புறங்களில் நடைபயிற்சி மேற்கொண்டது என இங்கே வளர்ந்த; வாழும் நாட்கள் எனக்கு பெருமகிழ்ச்சியை தந்திருக்கின்றன என பதிவிட்டிருந்தார்.
அமைச்சர் மா.சு சொன்ன தகவல்
அப்படி ஐ.ஐ.டி.வளாகத்தில் இருந்து திடீரென தியாசபிகல் சொசைட்டி வளாகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் நடைபயிற்சியை மாற்றிக் கொண்டார் தெரியுமா? 2019-ம் ஆண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அவரும் நானும் என்ற ஒரு நிகழ்ச்சியில் இன்றைய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அவர்தான் இந்த பின்னணியை முதலில் விவரித்தார். அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது இதுதான்... "தளபதியைப் பொறுத்தவரைக்கும் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) ஐ.ஐ.டியில் நடந்து கொண்டிருந்தார்.. காலையில் அங்க வாக்கிங் போவார். நானும் கூடப் போவேன். ஒரு சின்ன பையன், வில்சன்.. குட்டிப் பையன்.. மாற்றுத் திறனாளி.. உயரமும் குறைவானவன். டெய்லியும் அவங்க வீட்டு வாசலில் நின்று கைகாட்டுவான். ஸ்டாலின் வாக்கிங் போகும்போது தினமும் காட்டுவான். இவரும் கை காட்டுவார். அந்த வீடு வந்தாலே தானா அந்த பக்கம் திரும்புவார் ஸ்டாலின் . இது ஒரு வருஷத்துக்கும் மேல தொடர்ந்தது.
ஐஐடிக்கு போகாதது ஏன்?
திடீர்னு ஒருநாள் அந்த பையன் வரலை. என்கிட்ட சுப்பிரமணி என்னாச்சு விசாரின்னு ஸ்டாலின் சொன்னாரு.. அப்ப உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்கன்னு அவங்க வீட்டுல சொன்னாங்க.. அப்புறம் ஸ்டாலின் ஊருக்குப் போயிட்டார். அவர் சென்னை வருவதற்குள் அந்த பையன் இறந்துவிட்டான். இந்த தகவலை ஸ்டாலினுக்கு சொன்னேன். போனிலேயே அவர் விசும்புகிற சப்தம் கேட்டது. அந்த பையனின் இறுதி சடங்குகளை பக்கத்தில் இருந்து செய்ய சொன்னார்.. அப்படியே நானும் செஞ்சேன். அப்புறம் 2 மாசம் அந்த தெருபக்கமே போக வேண்டாம்னு சொல்லிட்டார்..அந்தப் பக்கம் போனா அந்த பையனோட ஞாபகம் வரும்.. வேண்டாம்னு சொன்னார்.. "என்று கூறியிருந்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த துயர சம்பவத்துக்குப் பின்னர்தான் ஒரு கட்டத்தில் தியாசபிகல் சொசைட்டி வளாகத்துக்குள் வாக்கிங் செல்ல தொடங்கினார் ஸ்டாலின் என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள்.