'நாகாலாந்து' காயத்துக்கு தமிழகத்தில் மருந்து போட நினைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. நினைத்தது நடந்ததா?
சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டதும் பத்திரிகையாளர்களை சந்தித்தன் பின்னணி தொடர்பான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
பொதுவாக, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா முடிந்ததும் பத்திரிகையாளர்களை ஆளுநர் சந்திப்பது வழக்கமில்லை. இதற்கு முந்தைய ஆளுநர்கள் யாரும் இப்படி சந்தித்ததில்லை என்கிறார்கள்.
ஆனால், இந்த வழக்கத்தை மீறி பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஆர்.என்.ரவி. இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது, நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்தார் ஆர்.என்.ரவி.

ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம்
நாகாலாந்து மாநிலத்தில் கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை ஆர்.என்.ரவிக்கு எதிராக நடத்திய போராட்டங்களால் தான் தமிழகத்துக்கு மாற்றப்பட்டார். நாகாலாந்து விடுதலைப் போராட்ட இயக்கங்களிடம் மட்டுமல்ல , பாஜக ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சியினர், பொது மக்கள், எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பிலும் ஆர்.என்.ரவிக்கு எதிராக அதிருப்திகள் வெடித்திருந்தன. இதனை சமாளிக்க முடியாமல்தான் அவர் மாற்றப்பட்டார்.

கோஹிமா பிரஸ் மீட்
நாகாலாந்து மாநிலத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பு கடைசியாக பத்திரிகையாளர்களை சந்தித்து தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்த நினைத்திருந்தாராம் ஆர்.என்.ரவி. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்புக்கும் கோஹிமாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்திருக்கிறது. ஆனால், இந்த பத்திரிகையாளர் சந்திப்பை அனைத்து பத்திரிகைகளும் புறக்கணித்து விட்டனவாம். அதனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை.
Recommended Video

சென்னை பிரஸ் மீட்
இதனால் ஏகத்துக்கும் வருத்தத்தில்தான் ஆர்.என். ரவி இருந்துள்ளார். இந்த நிலையில், தமிழகத்தில் பதவியேற்றதும் பத்திரிகையாளர்களை சந்தித்தால், நிச்சயம் நாகாலாந்து தொடர்பாக கேள்விகள் வரும்.. அப்படி வரும் போது நாகாலாந்தில் தமக்கு ஏன் எதிர்ப்பு வந்தது என்பது உள்ளிட்ட நிறைய விசயங்களை சொல்லலாம். அது தேசிய அளவில் எதிரொலித்து நாகாலாந்த் மாநிலத்துக்கும் போய்ச்சேரும் என்று திட்டமிட்டுதான் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி ராஜ்பவன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாராம் ஆர்.என்.ரவி.

ஆளுநர் ரவிக்கு ஏமாற்றம்
அதன்படி பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. ஆனால் ஆர்.என்.ரவி எதிர்ப்பார்த்த மாதிரி தமிழக பத்திரிகையாளர்களிடமிருந்து நாகாலாந்து தொடர்பான எந்த ஒரு கேள்வியும் வரவில்லை. அவரால் தனது மன ஆதங்கத்தையும் வெளிப்படுத்த முடியவில்லை. வழக்கத்தை உடைத்து பத்திரிகையாளர் சந்திப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தியதன் பின்னணி இதுதான் என்று சொல்கிறது அதிகாரிகள் தரப்பு.












Click it and Unblock the Notifications