டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்கள் விஏஓ பதவியை அதிகம் விரும்புவது ஏன்? விஏஒ பதவி ஏன் முக்கியமானது?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பலர் விஏஓ பதவியை பெரிதும் விரும்புகிறார்கள்.இதற்கு முக்கிய காரணம் இளநிலை உதவியாளர் உள்பட மற்ற பணிகளைவிட விஏஒ பதவிக்கு ஓரளவு அதிகாரம் இருக்கிறது.
கிராம நிர்வாக அதிகாரி என்பது அந்த கிராமத்தையே நிர்வாகம் செய்யும் அதிகாரம் உள்ள பதவியாகும். கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி பார்க்க வேண்டும். நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேர வேண்டிய தொகைகளை வசூலிக்க வேண்டும். சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்க வேண்டும். பிறப்பு, இறப்புப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்.
தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடும்போது உதவி செய்ய வேண்டும். கொலை,தற்கொலை,அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைகளுக்கு உதவி புரிய வேண்டும்.
காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் பற்றி அறிக்கை அனுப்ப வேண்டும். இருப்புப் பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும். கால்நடைப் பட்டி மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரிக்க வேண்டும்.
கட்டடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும். விஏஒவிடம் தான் அரசின் புறம்போக்கு சொத்துக்கள் குறித்து பதிவேடுகள் இருக்கும் என்பதால் அதை கவனமாக பராமரிக்க வேண்டும். புதையல்கள் பற்று மேல் அலுவலகர்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.முதியோர் ஒய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளைக் கவனிக்க வேண்டும். முதியோர் ஒய்வூதியப் பதிவேட்டைப் பராமரித்தல், வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்களை அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல் போன்றவையும் முக்கியமாகும்,.
இது தவிர கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம பணியாளர்களுடைய பணியினை கண்காணிப்பது, நில ஆக்கிரமிப்புகளை தடுப்பது மற்றும் மேல் அலுவலகர்களுக்குத் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது, சர்வே கற்களை பராமரிப்பது, காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புதல், கிராமத்தில் நிகழும் சமூகவிரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையையும் தெரிவிக்க வேண்டும்.
வருவாய்த்துறை அலுவலகர்களுக்கும் மற்ற துறை அலுவலகர்களுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது. சட்ட-ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்ட - ஒழுங்கு பேணுதற்காகக் கிராம அளவில் அமைதி குழு கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல், கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.
என்ன கேட்டுகும் போதே தலைசுற்றுகிறதா? ஆம் கிராம நிர்வாக அலுவலர் என்பது சாதாரண பணி இல்லை. கலெக்டர் என்பது இந்த பணிகளையும் அதையும் மாவட்டம் முழுவதும் செய்யக்கூடியவர். கலெக்டர் தான் அந்த மாவட்டத்தின் நிர்வாக அதிகாரி, அவரது தலைமையில் தான் அரசின் நிர்வாகமே இயங்கும். அதுபோல் தான் கிராம நிர்வாக அதிகாரி என்பவரது தலைமையில் தான் அந்த கிராமத்தின் நிர்வாகம் இயங்கும் எனவே கிராம நிர்வாக அலுவலர் பணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே விஏஓ பதவியின் முக்கிய்த்துவம் பற்றி நாகப்பட்டினம் சுற்றுலா வளர்ச்சி துறை அரவிந்த் குமார் கூறுகையில், TNPSC குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் பணியை தவிர மற்ற எந்தத் துறையின் இளநிலை உதவியாளர் பணியும் கண்டிப்பாக மனநிறைவையும் தராது. அதுபோல தனிப்பட்ட சிறிய அதிகாரங்கள் கூட கிடையாது. இளநிலை உதவியாளர் பணியில் இருந்து குரூப் 2 பணிக்கான பதவி உயர்வு அடைவதற்கு பல வருடங்கள் ஆகலாம். மேற்கொண்டு தேர்விற்கு படிக்கும் சூழல் சில துறைகளில் மட்டுமே உண்டு. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று தனி அதிகாரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தரவரிசையில் முன்னிலையில் இருந்தால் VAO பதவியை தேர்வு செய்யவும்.வருவாய்த் துறையில் வேலை செய்வது தற்போது மிகவும் கடினமான ஒன்றுதான். மேற்கொண்டு TNPSC தேர்விற்கு தயாராவது கொஞ்சம் கடினம். இருப்பினும் தனிப்பட்ட அதிகாரங்கள் வேண்டும் என்று நினைப்பவர்கள் VAO பணியினை தேர்வு செய்யவும். எனக்குத் தெரிந்து பல கிராம நிர்வாக அலுவலர்கள் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications