இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!
சென்னை: அதிமுகவின் சட்டமன்ற வலிமையை குறைக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். இது வரை 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமாக்கள் அரசியலில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சி உள்ளேயே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக-விலிருந்து விலகியுள்ள 3 எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க, நேரடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

தலைமை செயலகத்தில் வைத்தே அவர்கள் 3 பேரும் தவெகவில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கிசுப்பையாவும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா மூலம் தவெகவில் இணைவதற்கு மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
நீங்கள் தான் தவெக வேட்பாளர்
உங்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் போது, நீங்கள் தான் தவெக வேட்பாளர் என்கிற உத்தரவாதமும், தற்போது அவர்களுக்கு இருக்கும் கடன்களை அடைக்கும் பொறுப்பு தங்களுக்கானது என்பதையும் தெரிவித்து அவர்களை வளைத்துள்ளது தவெக தலைமை. பெரும்பான்மையை முதல்வர் விஜய் நிரூபித்துவிட்டதால், இனி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை யாரும் சட்டமன்றத்தில் நடப்பு 6 மாதத்திற்குள் கொண்டு வர முடியாது.
அதனால், இந்த 6 மாத காலத்தில் தவெகவுக்கு பெரும்பான்மை பலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் அடிப்படைத் திட்டம்.
தவெகவின் நேரடி வலிமை
அதாவது, தவெகவுக்கு தற்போது 107 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதில் ஒருவர் சபாநாயகர். ஆனால், சட்டமன்றத்தில் ஓட்டெடுப்பு என வருகிறபோது சபாநாயகர் வாக்களிக்க முடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் ஓட்டும், எதிர் தரப்பின் ஓட்டும் சமமாக இருக்கும் போதுதான் சபாநாயகர் ஓட்டளிக்க முடியும். இதனைக் கணக்கிட்டால், தவெகவில் பலம் என்பது 106 எம்.எல்.ஏ. க்கள் தான்.
அதனால், தவெகவின் நேரடி வலிமையை குறைந்தபட்சம் 120 ஆக கொண்டு வர வேண்டும். அதற்கு இன்னும் 14 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி காலியாக இருக்கிறது.
இடைத் தேர்தலில் 14 சீட்டு
அந்த வகையில் இன்னும் 13 தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டு அவைகளுக்கு ( 14 தொகுதிகள் ) மொத்தமாக இடைத்தேர்தல் நடக்க வேண்டும். இடைத் தேர்தலில் 14 சீட்டுகளையும் வென்று விட்டால் தவெகவின் பலம் 120 ஆக உயரும்.
அதனை திட்டமிட்டே இந்த ராஜினாமாக்கள் நடக்கிறது. ஆனால், தவெகவின் தலைமையின் விருப்பம் இப்படியாக இருக்கும் பட்சத்தில், இடைத் தேர்தலில் அந்த 14 தொகுதிகளையும் தவெக வெல்லும் என்பதற்கு உத்தர வாதம் கிடையாதே. அதுவும் ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏ. க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் அவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்பதற்கும் நிச்சயம் உத்தரவாதம் கிடையாது. எதையோ நினைத்து எதையோ செய்து கொண்டிருக்கிறது ஆளும் கட்சி என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications