“செங்கோட்டையனே.. சூடு சொரணை இருந்தா..” அதிமுக நிர்வாகியின் எச்சரிக்கை போஸ்டரால் பரபரப்பு!
சென்னை: "அடையாளம் தந்த அதிமுகவே வேண்டாம் என்று போன பிறகு "எம்ஜிஆர், அம்மா" படம் மட்டும் எதற்கு? சூடு, சொரணை இருந்தால் எம்ஜிஆர், அம்மா படத்தை பயன்படுத்தாதே" என்ற வாசகத்துடன் செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய்யின் முன்னிலையில் அண்மையில் அக்கட்சியில் இணைந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நவ. 26 ஆம் தேதி அவர் ராஜினாமா செய்த நிலையில், நவம்பர் 27 ஆம் தேதி அவர் தவெகவில் இணைந்தார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார். அதைத்தொடர்ந்து, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்ததன் காரணமாக அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இந்நிலையில் 27 ஆம் தேதி தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்ற செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
அப்போது, தவெக தலைவர் விஜய், செங்கோட்டையனுக்கு தவெகவின் சால்வை அணிவித்து வரவேற்றார். விஜய் தவெகவின் கட்சித் துண்டை செங்கோட்டையனின் கழுத்தில் அணிவித்தார். பிறகு விஜய் தவெகவின் உறுப்பினர் அட்டையை செங்கோட்டையனிடம் வழங்க, அதைப் பெற்றுக் கொண்டு தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.
இந்நிலையில், ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தவெக தலைவர் விஜய் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. தவெகவில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஆகிய பதவிகளையும் தனது பெயருடன் சேர்த்துப் போட்டுள்ளார் செங்கோட்டையன்.
மேலும், செங்கோட்டையன் என்ற பெயரும், தவெக கொடி வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் தனது காரிலும் கட்சிக் கொடியை மாற்றி உள்ளார் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவில் செயல்பட்டு வந்த செங்கோட்டையன், அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு கட்சி மாறி இருக்கிறார். எனினும், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்துவதை அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அதிமுக வாக்குகளை தவெகவிற்கு திசைதிருப்ப அவர் இப்படிச் செய்வதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"செங்கோட்டையனே.. அடையாளம் தந்த அதிமுகவே வேண்டாம் என்று போன பிறகு "எம்ஜிஆர், அம்மா" படம் மட்டும் எதற்கு? சூடு, சொரணை இருந்தால் எம்ஜிஆர், அம்மா படத்தை பயன்படுத்தாதே..." என்ற வாசகத்துடன் சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் மணலூர் மணிமாறன் போஸ்டர் ஒட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications