அந்த சம்பவத்துக்கு பிறகு சட்டசபைக்கே போகல.. பிடிவாதமாக இருந்த விஜயகாந்த்! ஏன் தெரியுமா? இதான் காரணம்
சென்னை: சட்டசபையில் நாக்கைத் துருத்திப் பேசிய சம்பவத்திற்குப் பிறகு சட்டசபைக்குச் செல்வதையே தவிர்த்து வந்தார் விஜயகாந்த். அப்படியே சென்றாலும் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு அவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் திரும்பி விடுவார். விஜயகாந்த் சட்டசபைக்கு செல்லாதது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அப்போதே விளக்கம் அளித்தார்.
திரைத்துறையில் சாதித்த விஜயகாந்த், அரசியலிலும் தனது முத்திரையை பதிக்க 2005ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார். இதனையடுத்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது தேமுதிக. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதனையடுத்து தனது அரசியல் பேச்சால் மக்களை கவர்ந்தவர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்தார்.

2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த் அழைக்கப்பட்டார். அப்போது அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக அதைவிட குறைவான இடங்களையே பெற்றது. இதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார் விஜயகாந்த்.
அடுத்த சில மாதங்களில் அதிமுக - தேமுதிக இடையே மோதல் உருவானது. சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவால் அதிமுக வெற்றி பெற்றதா? அதிமுகவால் தேமுதிக வெற்றி பெற்றதா? என்ற மோதல் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது அதிமுகவினர் கூச்சல் எழுப்பியதால் ஆவேசமடைந்த விஜயகாந்த் கைகளை நீட்டி நாக்கை துருத்தி எச்சரித்தார். சட்டமன்றத்தில் மோதல் வலுத்ததையடுத்து சட்டமன்றத்தில் இருந்து தேமுதிகவினர் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அப்போது முதல் சஸ்பெண்ட் காலம் முடிந்தும், சட்டசபைக்கே வராமல் இருந்தார் விஜயகாந்த். ஒரு மாதம் கழித்து அவர் சட்டசபைக்குச் சென்றாலும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து வந்தார். மார்ச் மாதத்தில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்போது சபைக்கு வராத விஜயகாந்த் மட்டும், நடவடிக்கையில் இருந்து தப்பினார். அடுத்த கூட்டத்தொடரில் பங்கேற்று, மக்கள் பிரச்னை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் விஜயகாந்த் ரெஜிஸ்டரில் மட்டும் கையெழுத்துப் போட்டுவிட்டுச் திரும்பிச் சென்றார்.
2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. அந்த தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அப்போது, கட்சி தொண்டர்களுடன் 'உங்களுடன் நான்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாமக்கல்லில் கட்சித் தொண்டர்களுடன் கலந்து கொண்டு, கலந்தாலோசனை நிகழ்ச்சியில், சட்டசபையில் நாக்கை கடித்ததற்கு விளக்கம் கொடுத்து பேசினார் விஜயகாந்த்.
"நான் சட்டசபைக்கு ஏன் போகவில்லை என பலரும் கேட்கின்றனர். அங்கே சென்று, எதிர்க்கட்சி தலைவராகவும் சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்ற முடியவில்லை. அதற்கான சூழ்நிலை அங்கு இல்லை. தமிழக சட்டசபையில் ஏற்கனவே நான் கலந்து கொண்ட போது, பால் விலை உயர்த்தப்பட்டது குறித்து பேசினேன். அடுத்து, அரசு திட்டம் சார்ந்த கேள்வியை எழுப்பினேன். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பதிலளிக்கவில்லை. சம்பந்தமே இல்லாமல், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எழுந்து நின்று பதில் கூறினார்.
அதுவும் என்னை கேலி செய்து பேசினார். அதனால் எனக்கு கோபம் வந்தது. என்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைச்சரை பார்த்து நாக்கை கடித்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், அதை தவறு என பிரசாரம் செய்கின்றனர். இது தவறு என்றால், சட்டசபையில் தொடர்ந்து கருத்து பரிமாற்றம் செய்யவும், மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறவும் முடியாது என்பதால்தான் நான் அங்கு செல்வதில்லை. அங்கு செல்லாமலேயே கூட மக்கள் பணியாற்ற முடியும். அதைத்தான், நான் செய்து வருகிறேன்" என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications