அதிமுகவில் 29 பேரின் பதவி பறிப்பு.. லீமா ரோஸ் மார்ட்டினை மட்டும் பதவி நீக்கம் செய்யாத எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களின் கட்சி பதவிகளை பறித்துள்ள எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மார்ட்டினின் கட்சிப் பதவியை பறிக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களைக் கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டசபையில் நடைபெற்றது.

aiadmk

அதிமுக பிளவு

இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் 22 பேர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக கட்சிக்குள் பெறும் குழப்பம் வெடித்தது.

இதற்கிடையே, நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு ஆதரவளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சி பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.

பதவிகள் பறிப்பு

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து செயல்பட்ட நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மொத்தம் 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, பல்வேறு தொகுதிகளை சேர்த்து, 17 மாவட்டங்களாக குறைத்து, அவற்றுக்கான புதிய மாவட்ட செயலாளர்களையும் பழனிசாமி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர், திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து காமராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நீக்கம்

கட்சியின் அமைப்புச் செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து சி.விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து பி.தங்கமணி, அமைப்புச் செயலாளர், தருமபுரி மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து கே.பி.அன்பழகன், அமைப்புச் செயலாளர், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து பா.பென்ஜமின், அமைப்புச் செயலாளர், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் அமைப்புச் செயலாளர், தேனி மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து ஜக்கையன், அமைப்புச் செயலாளர், திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து இசக்கி சுப்பையா, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.சி.சம்பத், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கே.சி.வீரமணி கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து இராமலிங்கம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அருண்மொழிதேவன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் நீக்கம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், நீலகிரி மாவட்ட செயலாளர் வினோத், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் சேகர், திருத்தணி கோ.ஹரி ஆகியோர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து இன்று முதல் நீக்கப்பட்டுள்ளனர்.

லீமா ரோஸ் மார்ட்டின்

ஆனால், அதிமுக மாநில மகளிர் அணி இணை செயலாளர் பதவியில் இருக்கும் லீமா ரோஸ் மார்ட்டின் பதவி பறிப்பு குறித்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் கிளம்பியுள்ளது.

தவெகவுக்கு ஆதரவளித்த 144 பேரில் 25 பேர் அதிமுகவின் எஸ்.பி வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள். அதில், லீமா ரோஸ் மாட்டின் எம்.எல்.ஏவும் ஒருவர். இவர், லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரான கு.ப.கிருஷ்ணனை 2,737 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

முக்கிய பதவி

பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகியுமாக இருந்தவர் லீமா ரோஸ். இவர்களின் மகன் ஜோ சார்லஸ், லட்சிய ஜனநாயக கட்சி தொடங்கி புதுச்சேரி அரசியலில் தடம் பதித்தார். அங்கு அவர் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெகவில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். தற்போது தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

லீமா ரோஸ் கடந்த ஜனவரி மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அதன்பிறகு பிப்ரவரி மாதம் அவர் திடீரென ஐஜேகே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஏற்பாட்டில் தான் அவர் அதிமுகவில் இணைந்ததாக கூறப்பட்டது.

லீமா ரோஸ் மார்ட்டின் பதவி மட்டும்

கட்சியில் இணைந்த ஒரு வாரத்திலேயே லீமா ரோஸ் மார்ட்டினுக்கு மாநில அளவில் வெயிட்டான பதவி வழங்கினார் எடப்பாடி பழனிசாமி அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் லீமா ரோஸ் மார்ட்டின் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, லால்குடி தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டு, அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.

இந்நிலையில், கட்சித் தலைமை முடிவை மீறி தவெக ஆட்சிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளார் லீமா ரோஸ் மார்ட்டின். தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்களின் கட்சிப் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மார்ட்டினின் பதவியை மட்டும் பறிக்காமல் இருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+