விஜய்க்கு ஏன் சிஎம் பாதுகாப்பு கொடுத்தீங்க? டிஜிபியை நேரில் கூப்பிட்டு விளக்கம் கேட்ட தமிழக ஆளுநர்!
சென்னை: விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததும், முதல்வருக்கு உண்டான பாதுகாப்புகள் விஜய்க்கு வழங்கப்பட்டன. நேற்று கான்வாய் வாகனங்கள் உள்பட வீட்டின் முன் நிறுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்லேகர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை நேரில் அழைத்து எதன் அடிப்படையில் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வென்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் அவரது வீட்டு வாசலில் மெட்டல் டிடெக்டர் கருவிகளும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர் செல்லும் இடங்களில் முதல்வருக்கான கான்வாய் உடன் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், முதல்வருக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்படுமோ அதுபோன்ற பாதுகாப்புகள் அளிக்கப்பட்டன.
இந்த பாதுகாப்புடன் கடந்த இரு தினங்களாக விஜய் வலம் வந்தார். இதற்கிடையே, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததையடுத்து நேற்று இரவோடு இரவாக அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. விஜய் கேட்டுக் கொண்டதால்தான் நீலாங்கரை வீட்டில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக த.வெ.க. இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்தார்.
ஆனால், விஜய் முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டதால் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழக ஆளுநர் ஆர்லேகர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை அழைத்து விஜய்க்கு ஏன் முதல்வருக்கான பாதுகாப்பு கொடுத்தீர்கள் என்ற கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுநர் - டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தலைமை செயலர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது விஜய்க்கு எதன் அடிப்படையில் முதல்வருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
மேலும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. உளவுத்துறை சில எச்சரிக்கைகள் கூறியிருந்தது. அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரிடம் கேட்டறிந்து வருவதாக கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications