அதுசரி மெட்ராஸ் டே ஏன் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது? சுவாரசிய வரலாற்று பின்னணி இதுதான்!
சென்னை: சென்னையின் நிறுவன நாள்- மெட்ராஸ் டே என்பது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையின் 383-வது நிறுவன நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.
Recommended Video
சென்னை பெருநகரமானது இந்த தேதியில் இன்னாரால் கட்டி எழுப்பப்பட்டது என்ற வரலாற்றைக் கொண்டது. சென்னை நிலப்பரப்பு என்பது நெடிய வரலாற்றைக் கொண்டது.
சென்னை போன்ற மிகப் பழமையான நகரத்துக்கு எப்படி பிறந்த நாள் அல்லது நிறுவன நாள் அல்லது Day என்பது கொண்டாடுவது சரியாக இருக்கும்? அதேநேரத்தில் சென்னையில் பழம் பெரும் வரலாற்றை ஆய்ந்து அறிந்த அறிஞர்கள் காரணமே இல்லாமலா ஆகஸ்ட் 22-ந் தேதி சென்னை நிறுவன நாள் என கொண்டாட சொல்வார்கள் என்கிற கேள்வியும் எழும்.

சென்னையில் உள்ள திருவான்மியூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆலயங்கள் மிகப் பழமையானவை, இந்த திருத்தலங்கள் பாடல் பெற்ற தலங்கள்.அதாவது சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தலங்கள் சமயக் குரவர்களால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. அப்படியானால் ஏன் கி.பி.1639, ஆகஸ்ட் 22 என்பது சென்னையின் நிறுவன நாளாக குறிக்கப்படுகிறது?
இன்றைய சென்னை பெருநகரமும் சென்னை என்ற பெயரும்தான் சில நூற்றாண்டுகால வரலாறு கொண்டவை. ஆனால் சென்னைக்குள் உள்ளடக்கிய எத்தனையோ ஊர்களும், புரங்களும் பட்டினங்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் தாய் நிலப் பகுதியாகவே இருந்து வருகின்றனவைதான். உதாரணமாக எழுமூர் நாடு என சோழர் காலத்தில் குறிப்பிடப்பட்டது எது தெரியுமா? அதாவது நம்ம எக்மோர்தான். சென்னை எழும்பூர்தான் சோழர் கால எழுமூர் நாடு என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதற்கெல்லாம் சாட்சியமாக இருப்பவை கூவம், அடையாறு, கொற்றலை நதிகள்தான்.
சரி நாம் மீண்டும் ஆகஸ்ட் 22-ந் தேதிக்கு வருவோம்.. கி.பி.1639- ஆகஸ்ட் 22-ந் தேதி என்னதான் நடந்தது?
சென்னையில் தற்போது தலைமை செயலகம் அமைந்துள்ள இடத்தின் பெயர் புனித ஜார்ஜ் கோட்டை (செயின்ட் ஜார்ஜ் கோட்டை). இந்த இடத்தின் ஒரு பகுதியை ஆங்கிலேயர்கள்- அதாவது கிழக்கிந்திய கம்பெனியானது முதன் முதலில் விஜயநகர மன்னர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியது. பின்னர் இந்நிலப் பகுதியை சுற்றிய ஊர்களும் ஏரிகளும் புரங்களும் பட்டினங்களும் பாக்கங்களும் மெல்ல மெல்ல ஒன்றிணைக்கப்பட்டு சென்னை பெருநகரமாக விஸ்தீரனமடைந்து இன்று நிற்கிறது. இதற்கு அடித்தளமாக இருந்தது கிழக்கிந்திய கம்பெனியினர், விஜயநகர மன்னர்களிடம் புனித ஜார்ஜ் கோட்டையி நிலப் பகுதியை முதன் முதலில் வாங்கியதுதான். அந்த நாள்தான் கி.பி.1639, ஆகஸ்ட் 22. ஆகவே சென்னை நாள், மெட்ராஸ் டே என்பதை ஆகஸ்ட் 22, 1639 ஐ கணக்காகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications