திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றுவிட்டு.. இப்போது ஏன்.. ராமதாஸ் பரபர விளக்கம்!
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் ஆட்டம் தமிழகத்தில் சூடுபிடித்து இருக்கிறது. அதிமுக தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது.
இன்று அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது. பாமக - அதிமுக ஒப்பந்தம் இன்று தான் கையெழுத்தானது. அதன்படி 7 லோக்சபா தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது.
கடும் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், இந்த மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்காக மிக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
என்ன நிலைப்பாடு
திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடாக 2011ல் இருந்தது. ஆனால் தமிழகம் இதற்கு இடைப்பட்ட காலத்தில் நிறைய இன்னல்களை சந்தித்துவிட்டது. பல முக்கிய நேரங்களில் தமிழகத்தின் உரிமைகள் மொத்தமாக பறிக்கப்பட்டது. இதையடுத்து பாமக சார்பாக 2018 ஜனவரியில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
என்ன மாற்றம்
பாமக மக்களவையில் இருந்தவரை தமிழகத்திற்கு நிறைய நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சராகவும், ரயில்வேத்துறை இணை அமைச்சகமும் பாமக வசம் இருந்தவரை அந்த துறை சார்ந்த நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு நிறைய வந்தது. ஆனால் தற்போது அமைச்சரவையில் பாமக இல்லாததால் தமிழக மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் சென்று சேரவில்லை.
பாமக
இதனால் பாமக இதற்கான தேர்தல் வியூகத்தை வகுத்தது. மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் பாமக மக்களவையில் இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதனால் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் பெரிய கட்சிகள் என்றால் அதிமுக, திமுகதான். அதற்கு அடுத்த பெரிய கட்சி பாமக.
நல்லது செய்ய
ஆனால் பாமக தலைமையில் தனியாக கூட்டணி அமையாது. இதனால் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே சரியான முடிவாக இருந்தது. ஆனால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றுவிட்டு பின் கூட்டணி வைப்பது எப்படி சரியானதாக இருக்கும் என்று கேள்விகள் எழுந்தது. ஆனால் இப்படிப்பட்ட கூட்டணியில் இடம்பிடித்தால் மட்டுமே பாமக மக்களவையில் இடம்பிடிக்க முடியும்.
திட்டம் என்ன
அப்போதுதான் தமிழகத்திற்கான நலத்திட்டங்களை கொண்டு வர முடியும். இதனால் பாமக தனது கொள்கைகளில் கொஞ்ச சமரசம் செய்து கொள்ள முடிவெடுத்தது. தமிழக நலன் கருதி கூட்டணி வைப்பதில் தவறில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக திமுக இரண்டில் ஒரு கட்சியை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு சென்றோம்.
திமுக இல்லை
மத்திய அமைச்சரவையில் அன்புமணி ராமதாஸ் இருந்த போது நிறைய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். ஆனால் திமுக அதற்கான பணிகள் எதையும் தொடங்கவே இல்லை. திமுக ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து நிறைய பின்னடைவுகளை சந்தித்து வந்தது. ஆனால் அதிமுக மீதும் சில விமர்சனங்கள் இருக்கிறது.
அதிமுகதான்
ஆனால் காவிரிக்காக அனைத்து கட்சி கூட்டம், 7 தமிழர் விடுதலை என பல விஷயங்களில் பாமகவின் கோரிக்கையை அதிமுக செவிசாய்த்து கேட்டது. அதேபோல் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. இதனால் நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட உறுதி ஏற்றுக்கொண்டோம்.
உழைப்பு
தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் இந்த முடிவு சரியாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த தேர்தல் கூட்டணிக்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். அனைத்து கட்சிகளுடன் இணைந்து பாடுபட்டாலும் பாமக அதன் கொள்கைகளில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளவே கொள்ளாது, என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.