ஜீவனாம்சத்தை கேட்ட மனைவி.. டாக்டரின் உடம்பு, தொழிலை சிதைத்த கோபக்கார பெண்.. நீதிபதி சொன்ன வார்த்தை
சென்னை: மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த தாக்குதலால் கணவர் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அது மிகப்பெரிய விவாதத்தை சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டுள்ளது..
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரைச் சேர்ந்தவர் வேத் பிரகாஷ் சிங்.. இவர் ஒரு ஹோமியோபதி டாக்டர்.. இவருக்கும் அவரது மனைவி வினீதாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம், டாக்டர் வேத் பிரகாஷ் சிங் தனது கிளினிக்கில் இருந்தபோது, மனைவியின் சகோதரரும், மாமனாரும் சேர்ந்து டாக்டரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், டாக்டர் வேத் பிரகாஷ் சிங்கின் முதுகுத்தண்டில் குண்டு பாய்ந்தது. ரத்தம் கொட்டியது..
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. முதுகில் பாய்ந்த குண்டு வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் அந்த குண்டுகள் அவரது உடலில் இருப்பதாகவும், அதை ஆபரேஷன் செய்து அகற்ற முயன்றால் பாரலிசிஸ் பாதிப்பு அபாயம் அதிகம் உள்ளதாகவும் டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்..
வருமானம் ஈட்ட முடியவில்லை
இதனால், டாக்டரால் சரியாக உட்கார முடியாத நிலைமை ஏற்பட்டது.. முன்பு போல வேலை செய்து வருமானமும் ஈட்ட முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், மனைவி வினீதா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்...
இந்த மனுவை குஷிநகர் குடும்பநல நீதிமன்றம் கடந்த 2025 மே 7ம் தேதி தள்ளுபடி செய்தது... மேலும் தன்னுடைய உத்தரவில், "இந்த வழக்கின் சூழ்நிலையைப் பார்க்கும்போது, மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க முடியாது" என்று குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது..
ஜீவனாம்சம் கேட்டு அப்பீல் செய்த மனைவி
இந்த தீர்ப்பை எதிர்த்து வினீதா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி லட்சுமி காந்த் சுக்லா நேற்று முன்தினம் விசாரித்தார். அனைத்து ஆவணங்களையும், மருத்துவ அறிக்கைகளையும், வழக்கின் பின்னணியையும் ஆராய்ந்த பிறகு, கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
நீதிபதி தனது தீர்ப்பில் முக்கியமான கருத்துகளை தெரிவித்தார். "இந்த வழக்கில், கணவரின் வருமானம் ஈட்டும் திறன், மனைவியின் குடும்பத்தினரின் குற்றச்செயலால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களே அந்த தவறின் விளைவிலிருந்து ஆதாயம் தேட அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால், அது மிகப்பெரிய அநியாயமாக இருக்கும்..
பராமரிப்பு தொகை கோர முடியாது
இந்திய சமூகத்தில் பொதுவாக கணவர் வேலை செய்து மனைவியைப் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணவர் மனைவியைப் பராமரிப்பது ஒரு கடமைதான். ஆனால், அந்த கடமை அவரின் வருமானம் மற்றும் உடல் திறனைப் பொறுத்தது.
இந்த வழக்கில் கணவர் உடல் ரீதியாகவே வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார். அதற்கு நேரடி காரணம் மனைவியின் குடும்பத்தினரின் தாக்குதல்தான்.. அதனால் மனைவி தனது செயல்கள் அல்லது அவரது குடும்பத்தினரின் செயல்கள் மூலம் கணவரின் வாழ்வாதாரத்தை அழித்திருந்தால், அந்த நிலையை பயன்படுத்தி அவர் பராமரிப்பு தொகை கோர முடியாது" என்று நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்..
முன்னுதாரணம் - சிறந்த தீர்ப்பு
இந்த தீர்ப்பு, ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக கருதப்படுகிறது. ஒருவரின் தவறான செயல்களால் உருவான நிலையை பயன்படுத்தி சட்டப்படி நன்மை பெற முடியாது என்ற கொள்கையை இந்த தீர்ப்பு வலியுறுத்துவதை பலரும் வரவேற்று வருகின்றனர்.
ஜீவனாம்சம் வழங்கும் சட்டத்தின் அடிப்படை நோக்கம், வேலை செய்ய முடியாத அல்லது ஆதரவற்ற நிலையில் இருக்கும் மனைவியை பாதுகாப்பதே ஆகும். அது தவறு செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கச் செய்யும் சட்டமாக இருக்கக் கூடாது.
மனைவியின் குடும்பத்தினர் செய்த குற்றச்செயலால் கணவரின் வாழ்வாதாரம் அழிந்திருந்தால், அந்த நிலையை பயன்படுத்தி மனைவி பணம் கோருவது நீதிக்கு எதிரானதாகும். இதனைத் தடுக்கவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications