நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்.. சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்த வழக்குகளில் கஸ்தூரி கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பிசிஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், பிரபல நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார்.. இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளித்த புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கஸ்தூரிக்கு சம்மன்: அவருக்கு சம்மன் அளிக்க சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த சூழலில், முன்ஜாமீன் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.. இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் படத் தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பிறகு அங்கிருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து, ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் புழல் மகளிர் சிறையிலும் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, கஸ்தூரி தூக்கமின்றி தவித்து வருவதாகவும், சரியாக சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது..
ஜாமீன் : இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் நடிகை கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம், அவரது வழக்கறிஞர், டி.ஆர்.பிரபாகரன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, 'நடிகை கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்காமல் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. சிறையில் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். ஜாமீன் கேட்டு எழும்பூர் கோர்ட்டில் மனு கொடுத்துள்ளோம். விரைவில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அடுத்தடுத்த வழக்கு: இதனிடையே, அவர் மீதான அடுத்தடுத்த வழக்குகளிலும் கஸ்தூரியை கைது செய்யும் பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் கஸ்தூரிக்கு ஆட்டிஸம் பாதித்த குழந்தை இருப்பதால் அதனை போலீசார் தற்போது ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலம் நடிகை கஸ்தூரி கோயம்பேடு மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கஸ்தூரி மீது புகார்கள் உள்ளன. அதேபோல் மதுரை, கோவை, கும்பகோணம் என மொத்தம் 6 புகார்கள் அவர் மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications