டெல்லி விடாது.. வேற பிளான் இருக்கு! எடப்பாடி எடுத்த புதிய பாதை.. தாமரைக்கு "ரரக்கள்" வைக்கும் செக்!
சென்னை: என்னது.. அதிமுக பாஜக கூட்டணி முறிய போகுதா.. மூன்றாவது அணி தமிழ்நாட்டில் உருவாகுதா.. என்ற விவாதங்களும், கேள்விகளும்தான் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தற்போது அதிகம் கேட்கின்றன. அதிமுக - பாஜக இடையில் கடந்த 5 நாட்களாக ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு கட்சிகளின் கூட்டணி முறிய போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுகின்றன.
ஆனால் அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததற்கு.. இல்லை இல்லை அதற்கெல்லாம் சான்ஸே இல்லை. இப்போது இரண்டு தரப்பும் மோதுவதற்கு பின் வேறு ஒரு காரணம் இருக்கிறது.. வேறு ஒரு கணக்கு இருக்கிறது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
அது என்ன கணக்கு.. எடப்பாடி பழனிசாமியின் பிளான்தான் என்ன என்று அதிமுக தரப்பில் விசாரித்தோம். அவர்கள் சில விஷயங்களை புட்டு புட்டு வைத்தார்கள்.

எடப்பாடி கணக்கு
அதன்படி, அதிமுக தலைவர்கள் இப்போது பாஜகவை விமர்சித்து பேசுவது என்னமோ உண்மைதான். அவர்கள் சொல்லும் கருத்தும் நியாயம்தான். ஆனால் எடப்பாடி இப்போது அமைதியாக இருக்க வேறு காரணம் இருக்கிறது என்கிறார்கள் ரரக்கள். அதன்படி, 2024ல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இந்த அதிருப்தி அலையை அதிமுகவிற்கு சாதகமாக பயன்படுத்த எடப்பாடி நினைக்கிறார். அதாவது 2024 லோக்சபா தேர்தலில் 25 இடங்களை பிடிக்க பாஜக நினைக்கிறது. அப்படி என்றால் கூட்டணியில் அதிமுகவிற்கு 14 இடங்கள் அல்லது அதற்கு குறைவாக ஒதுக்கப்படும்.

பாஜக
பாஜகவின் இந்த 25 எம்பி ஆசையை எடப்பாடி விரும்பவில்லை. அதனால்தான் இப்போது கட்சியில் இருக்கும் தலைவர்களை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார். பொன்னையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு என்று டாப் தலைகள் பாஜகவை எதிர்த்து பேச இதுதான் காரணம். 2024ல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜக வரும் போது.. அதிமுக தலைகள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.. உங்களுக்கு 25+ இடங்கள் எல்லாம் கொடுக்க முடியாது.. கொடுத்தால் அதிமுகவில் தலைவர்கள் எதிர்பார்கள் என்று கூறி பாஜகவிற்கு செக் வைக்க எடப்பாடி திட்டமிட்டு இருக்கிறாராம்.

செக் வைக்க திட்டம்
25 இடம் எல்லாம் கொடுக்க முடியாது.. நாங்கள்தான் கூட்டணியில் லீடர். 10 இடங்களுக்கு மேல் கொடுக்க முடியாது என்று செக் வைப்பதற்காக எடப்பாடி பிளான் போட்டு இருக்கிறாராம். இப்போது அதிமுக தலைவர்கள் பேசும் அதிருப்தி கருத்துக்களை பயன்படுத்தி.. பாருங்க எங்க கட்சியில் எல்லாரும் அதிருப்தியில் இருக்காங்க.. உங்களுக்கு அதிக இடம் எல்லாம் கொடுத்தா எனக்குதான் சிக்கல் என்று பாஜகவை முற்சந்தியில் விட அதிமுக இரட்டை தலைமை போடும் "புதிய பாதைதான்" இந்த அதிருப்தி அலை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கூட்டணி உடையாதா?
அப்படி என்றால் கூட்டணி உடையாதா என்று கேட்டால்.. கூட்டணி எல்லாம் உடையாது என்கிறார்கள் அதிமுகவினர். இப்போது உள்ள எதிர்ப்பு அலையை பயன்படுத்தி முடிந்த அளவு பாஜகவிற்கான இடங்களை அதிமுக குறைக்கும். மற்றபடி கூட்டணி உடையாது. அதற்கு டெல்லியும் விடாது என்று எங்களுக்கு தெரியும். உள்ளூர் அளவில் பாஜகவுடன் உரசல் இருந்தாலும், டெல்லி பாஜகவுடன் அதிமுக உறவு நன்றாகவே இருக்கிறது. மோடி தட்டிக்கொடுத்ததை பார்த்தீங்களா.. அதனால் கூட்டணி உடைய சான்ஸ் குறைவு என்கிறார்கள் அதிமுக தலைகள்.

சசிகலா
அப்படியே கூட்டணி உடைந்தாலும்.. சசிகலாவிற்கு ஆதரவாக டெல்லி காய் நகர்த்தும். டெல்லியிடம் இப்போது ராசியாக இருப்பதால்தான் இபிஎஸ் - ஓபிஎஸ் சிக்கலின்றி இருக்கிறார்கள். கூட்டணி உடைந்தால், அதிமுகவிற்குள் சசிகலாவை இறக்க டெல்லி பாஜக முயலும். அதை எடப்பாடி விரும்ப மாட்டார். இதனால் இப்போதைக்கு அவர் கூட்டணியை உடைக்க வாய்ப்பே இல்லை... அதனால்தான் முடிந்த அளவு பாஜகவிற்கு ஒதுக்கப்படும் சீட்டுகளை குறைக்க அவர் பார்க்கிறார். இப்போது நடக்கும் மோதலும் அதை மையப்படுத்தியே இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications