"மெசேஜ்" டெல்லி பறந்தது.. போனை போட்ட 'தலை'.. மெகா அஸ்திரத்தை கையில் எடுக்கும் எடப்பாடி.. அப்ப அவர்?
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பாஜக செயல்படுமா, ஆலோசனை தருமா தெரியவில்லை
சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், இவர்களில் யாருக்கு தலைமைப் பொறுப்பு கிடைத்தாலும், அதை முடிவு செய்வது டெல்லி மேலிடமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி, சூப்பராக ஒரு அரசியல் கணக்கு போட்டுள்ளாராம்.
கடந்த 4 நாட்களாகவே ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி வருகிறது.. இதற்கு முன்பும் அதிமுகவில் எத்தனையோ பிரச்சனைகள் வெடித்துள்ளன.
ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலித்து வருகின்றன.. இருவரும் தனித்தனியாக, தங்களது வீடுகளில் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்..

ரத்தத்தின் ரத்தங்கள்
மற்றொரு பக்கம், கட்சி நிர்வாகிகளும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்... இந்த ஆலோசனை கூட்டங்களில், எடப்பாடி, ஓபிஎஸ் இருவருமே கலந்து கொள்ளவில்லை.. நிர்வாகிகள் மட்டுமே கூட்டங்களை நடத்தி கொண்டிருப்பது சலசலப்பை தந்து வருகிறது.. தினமும் ஆளுக்கொரு பக்கம் போஸ்டர்களை ஒட்டுவதும், கட்சி ஆபீசுக்கு வெளியே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்புவதமாக ராயப்பேட்டை தலைமை அலுவலகம் பரபரப்புடன் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இரு தரப்புமே இன்றைய தினம் மோதிக் கொண்டனர்.. கைகலப்பில் இறங்கிவிட்டனர்.. அப்போது, ஏற்பட்ட மோதலில் ரத்த காயமும் ஏற்பட்டுள்ளது.. பெரம்பூர் முன்னாள் செயலாளர் மாரிமுத்து என்பவரை அடித்துதாக்கி உள்ளதாக தெரிகிறது.. இவர் எடப்பாடியின் ஆதரவாளர் என்கிறார்கள்.. அவர் மருத்துவமனை செல்லும்போது வழியில், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் வந்தேன்... அவரை மேலே விட்டு விட்டு கீழே வந்தபோது, எடப்பாடி ஆதரவாளரா? என்று என்னை கேட்டு தாக்கினார்கள்... அலுவலகத்துக்குள்ளே ரவுடிகள் தான் இருக்கிறார்கள்.. தொண்டர்கள் இல்லை" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

டமார் ஜெயக்குமார்
இதையடுத்து, அதிமுகவுக்குள் மேலும் பிளவுகள் அதிகமாகிவிட்டது நிரூபணமாகிவிட்டது.. இதற்கு முன்பும் நிறைய பிரச்சனைகள் கட்சிக்குள் ஏற்பட்டிருந்தாலும், இரட்டை தலைமைகள் அடக்கி வாசித்தன.. இந்த முறை, 2 தரப்பிலுமே பிடிவாதம் தொடர்கிறது.. வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களில் என்ன நடந்தாலும், அவை யாவும் வெளியே சொல்லக்கூடாது.. ஆனால், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் ஒற்றை தலைமை விஷயத்தை டமார் என போட்டு உடைத்து, கூட்டத்தில் நடந்ததை அம்பலப்படுத்தினார். இதுவே திட்டமிட்ட செயல் என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பில்.

ரணகளமாகிவிட்டது
ஆனால், எடப்பாடி தரப்போ, ஓபிஎஸ் தேவையில்லாமல் பிடிவாதம் பிடிப்பதாகவும், திடீரென செய்தியாளர்களை சந்தித்து, கட்சியை தான் தான் வழிநடத்துவதுபோலவும் காட்டி கொள்வதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.. இது எங்கே போய் முடியும்? என்ன தீர்வு என்று தெரியவில்லை.. அதிமுக ஆபீஸ் இப்படி ரணகளமாகி வரும் நிலையில், பாஜக என்ன செய்ய போகிறது என்பதும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.. மேலோட்டமாக பார்த்தால், பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு நிறையவே இருக்கும் என்பது தெரிந்த விஷயம்தான்.

செம பாயிண்ட்
என்றாலும், எடப்பாடி பழனிசாமியின் கணக்கு வேறு மாதிரியாக உள்ளதாக தெரிகிறது.. அதாவது மாநிலங்களவை தேர்தல் வரப்போகிறது.. நிச்சயம் அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு தேவை.. பாஜகவும் தனித்து போட்டியிட வாய்ப்பு கிடையாது.. இப்போதைக்கு அதிமுகவில் மட்டுமே அதிக அளவு எம்எல்ஏக்கள் உள்ளனர்.. அந்த எம்எல்ஏக்களில் பெரும்பாலும் எடப்பாடியின் ஆதரவாளர்களே உள்ளனர்.. இந்த ஒரு பாயிண்டை வைத்துதான், அன்று ஓபிஎஸ்ஸை மீறி, எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை எடப்பாடி எட்டி பிடித்தார்..

நெத்தியடி
தற்போது, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் என அனைத்து பக்கமும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு உள்ளது.. அதனால், கூட்டணி என்றால் தன்னிடம்தான் பாஜக வந்து நிற்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறாராம் எடப்பாடி.. தேர்தல் வரும்பட்சத்தில், நிச்சயம் கொங்கு பகுதியில் பிரதான இடங்களை பாஜக கேட்கவே செய்யும்.. அப்படி கேட்டால், பாஜக கேட்கும் தொகுதிகளை தாராளமாக ஒதுக்கி விட்டு தந்துவிடலாம் என்றும் எடப்பாடி யோசிக்கிறாராம். அதனால், எக்காரணம் கொண்டும், தனக்கு பாஜக நெருக்கடி தராது என்பதே அவர் கணக்கு..

டெல்லி
"ஓபிஎஸ் - எடப்பாடி இருவரில் யாருக்கு ஆதரவு என்றாலும், பாஜக என்ன முடிவு எடுக்க போகிறதோ, அதுதான் முக்கியம், அதுதான் அதிமுகவை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தும்" என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.. பாஜகவுக்கு ஓபிஎஸ், எடப்பாடி இருவருமே தேவை என்பதால், முடிந்தவரை இருவரையும் அரவணைத்து, ஒன்றிணைத்து செல்லவே மேலிடம் விரும்பும் என்கிறார்கள்.. ஆக மொத்தம், ஓபிஎஸ் ஒரு செக் வைத்தால், ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமி இன்னொரு செக் வைத்துவிடுகிறார் என்பதால், இதன் முடிவை டெல்லி மேலிடம்தான் முடிவு செய்யும்.. அநேகமாக அதுவே இறுதியான தீர்வாக இருக்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்து சொல்கிறார்கள்..!

அமித்ஷா
அதிமுகவில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகமும், பாஜக மேலிடத்திற்கு ஒவ்வொன்றாக எடுத்து சொல்லி வருவதாக கூறப்படுகிறத.. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸுடன் மேலிட தலைவர் ஒருவர் பேசியதாகவும் தெரிகிறது.. அப்போது, அதிமுகவின் உட்கட்சி பூசல், குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிரொலிக்கவே செய்யும் என்றும், பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்ட, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சிலர் மாற்றி வாக்களிக்கவும் வாய்ப்புள்ளதாக மேலிடம் சொன்னதாம். அதற்கு உட்கட்சி பூசலால், குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த பிரச்னையும் வராது என்று ஓபிஎஸ், எடப்பாடி இருவருமே உறுதி தந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications