தீவிரமடையும் பருவமழை.. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் சென்னைக்கு பாதிப்பு? துரைமுருகன் விளக்கம்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
வடகிழக்கு பருவமழை சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நீர் பிடிப்பு பகுதிகள் மிக விரைவாக நிரம்பி வருகிறது.
இந்த தொடர் மழை காரணமாகச் சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து மிக வேகமாகவே அதிகரித்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை
இன்று காலை 6 மணியளவில் ஏரிக்கு வினாடிக்கு 2187 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இப்போது மதியம் ஏரியின் நீர் வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 3675 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 2786 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அதாவது அணையின் மொத்த கொள்ளளவு 24 அடியாக இருக்கும் நிலையில், அதில் இப்போது 20.73 அடிக்கு நீர் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி
வரும் நாட்களிலும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1046 கன அடி நீர் இரண்டு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் அமைச்சர்கள் துரைமுருகன், தாமோ அன்பரசன் ஆகியோர் ஏரியைப் பார்வையிட்டனர்.

அமைச்சர் துரைமுருகன்
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு, நீர் வரத்து, உபரி நீர் வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் யாருக்கும் எந்தவொரு எந்த பாதிப்பும் இல்லை. மழை இருந்தாலும் கூட செம்பரம்பாக்கம் ஏரியை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணித்தே வருகிறோம்.

சென்னைக்கு ஆபத்து?
ஏரியால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.. முகலிவாக்கம்,மாங்காடு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் எந்த விதத்திலும் காரணம் இல்லை.. பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக கனமழை பெய்தது. இந்த மழை நீர் முகலிவாக்கம் வழியாகச் செல்வதால் அங்குக் கொஞ்சம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதையும் கூட சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நோ சான்ஸ்
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எவ்வளவு உபரி நீர் திறந்து விட்டாலும் பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பே இல்லை. மழையின் அளவை கண்காணித்து அதற்கேற்ப செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மழை நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் நிச்சயம் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பே இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

அதிகரிக்கப்படும்
வடகிழக்கு பருவ மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்தும் அதிகமாக உள்ளது. இதனால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் அளவு மெல்ல உயர்த்தப்பட்ட வாய்ப்புகள் அதிகம் என்றே பொதுப்பணித் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அமைச்சர்களின் இந்த ஆய்வின் போது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications