"இரண்டில் ஒன்று".. இதெப்படி இருக்கு.. "தலைவி" பாணியில் எடப்பாடியார்.. அதிர வைக்க போகும் அந்த முடிவு
ஜெயலலிதா பாணியை கையில் எடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: இந்த தேர்தலில் ஜெயலலிதா பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்க போவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.
வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.. இதற்காக இருபெரும் பிம்பங்களான சசிகலா & முக ஸ்டாலினை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
சசிகலா அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் இருப்பதாகவும், அதற்கான சட்டவழிகளில் இறங்கி வருவதாகவும் தெரிகிறது.. மற்றொரு புறம் தன்னுடைய ஆதரவாளர்களையும் சந்தித்து பேச போவதாகவும் கூறப்படுகிறது. இதைதவிர, அதிமுக தரப்பில் சில முக்கிய புள்ளிகள் சசிகலா தரப்புக்கு தாவக் கூடும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.
சாதகம்
இதெல்லாம் ஒருவேளை நடந்தால், அதிமுகவின் வாக்குகள் பிரியக்கூடும் அபாயம் உள்ளது.. அதன்மூலம் திமுகவுக்கு சாதகமான சூழல் ஏற்படும் நிலைமையும் உள்ளது.. ஆனால் முதல்வர் எடப்பாடியார் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேசமயம், அவர் பெரும் முன்னேற்பாடுகளுடன் களம் காண தயாராகி வருகிறார்.
வன்னிய சமுதாயம்
இந்த முறை எங்கு போட்டியிடுவது என்று எடப்பாடி பழனிசாமி யோசித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வந்தன.. எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது வேறு தொகுதியில் போட்டியிடுவாரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு உள்ளது. கொங்குமண்டலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று ஈஸியாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற முடிவிலும் அவர் இருக்கிறார் என்றார்கள்.
தொகுதி
இதற்கு காரணம், வன்னியர் ஓட்டுக்கள் பிரதானமாக இருக்கும் இடத்தில் போட்டியிடுவதைவிட, சமுதாய வாக்குகள் நிறைந்த கொங்கு மண்டலத்தில் போட்டியிட்டால், அது எளிதான வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா பாணியில் ஒரு முடிவை எடுக்கவுள்ளதாக சொல்கிறார்கள். அதாவது எடப்பாடி தொகுதி மட்டுமல்லாமல் இன்னொரு தொகுதியிலும் முதல்வர் இந்த முறை போட்டியிடலாம் என்பதே அது.
இரண்டில் ஒன்று
அநேகமாக, கரூர், திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய 2வது வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என்கிறார்கள். இரண்டிலும் வென்று எடப்பாடியார் புதிய வரலாறு படைப்பார்.. பொறுத்திருந்து பாருங்கள் என்று அவரது தரப்பு இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டதாம்.