ரேஷனில் மாற்றம்? இனி பாமாயில் கிடையாதா? கோட்டைக்கு போன கோரிக்கை.. என்ன சொல்கிறார் பி.ஆர். பாண்டியன்
சென்னை: ரேஷனில் சில பொருட்களில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி, விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற ஆர்வம் எகிறி வருகிறது.
நம்முடைய தமிழ்நாட்டில், தென்னைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே எழுந்து வருகிறது.

ரேஷன் கடைகள்: அதேபோல, ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்று தேங்காய் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தபடியே இருக்கிறார்கள். முக்கியமாக, கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்கிறார்கள். இதே கோரிக்கையை அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யை மக்களுக்கு வழங்கினால் நம் நாட்டை சேர்ந்த சிறு, குறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அரசுக்கு எடுத்துரைத்தபடியே உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்றும் சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
உண்ணாவிரதம்: தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில், கள் இறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் குறித்து சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி, பனை மற்றும் தென்னை மரங்களில், கள் இறக்கி விற்பனை செய்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
விவசாயிகள்: விவசாயிகள், இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மேலும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைக்கும் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
அதனால், தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை, கேரளாவில் விற்க தடை செய்யக்கூடாது. கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளுடன், கள் இறக்கி விற்கும் விவசாயிகளை இணைத்து, அவமானப்படுத்தி வழக்கு போடுவதை, போலீசார் தவிர்க்க வேண்டும்.
பாமாயில்: பாமாயிலை சாப்பிடுவதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு, ரேஷனில் விற்கப்படுகிறது.
அதற்கு பதிலாக, தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், எள், நிலக்கடலையில் இருந்து, எண்ணெய் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. அரசு செவிசாய்க்காவிட்டால், மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
தமிழக அரசு : ஏற்கனவே தமிழகத்தின் மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.. இப்போது விவசாய சங்கங்களும் முழு வீச்சில் இறங்கியிருக்கின்றன.. இதையடுத்து, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்ற ஆர்வம் எகிறிவருகிறது.












Click it and Unblock the Notifications