பொட்டியை கட்டும் "தங்கம்".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்!
அமமுகவில் சிஆர் சரஸ்வதிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது
Recommended Video
சென்னை: விசுவாசம் + உழைப்பு இருந்தால்.. எந்த பதவியும் அருகாமையில்தான் என்பதை சிஆர் சரஸ்வதி உணர்ந்துள்ளார் போலும்.. அமமுகவின் மிக முக்கிய பொறுப்புக்கு இவரது பெயர் இப்போது நிறையவே அடிபட்டு வருகிறது!
தேர்தலுக்கு முன்பு தங்கதமிழ்செல்வன், "திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம்" என்றார். தேர்தலுக்கு பிறகு, "தேனி தொகுதியில் தேர்தல் மின்னணு இயந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை சரியாக தான் இருந்தது" என்றார்.
இப்படி ஒரு பேச்சு பேசினால், இவரை நம்பி உள்ள தொண்டர்கள் நிலை என்னாவது? பொறுப்பு கொடுத்துள்ள கட்சியின் கதி என்னாவது? என்ற விவாதத்துக்குள் நாம் போக தேவையில்லை.

தங்க தமிழ்செல்வன்
ஆனால் அமமுக கரைய தொடங்கியதுமே, அதில் முதலில் அடிபட்ட பெயர் தங்கதமிழ்செல்வன்தான். இப்போது மட்டுமில்லை.. 3 வருஷமாகவே அதிமுகவில் இவரை கூப்பிட்டுகொண்டிருக்கிறார்கள். "அந்த ஒருத்தரை" தவிர யார் வேணும்னாலும் வரலாம் என்றே பகிரங்கமாக முதல்வர், அமைச்சர்கள் சொல்லி விட்டார்கள். இப்போதுதான் அந்த விஷயத்திற்கு அச்சாரம் போட்டுள்ளார் தமிழ்செல்வன்.

பிளாஸ்டிக் ஒழிப்பு
"தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் நல்லா இருக்கு" என்று எப்போதோ நடந்த விஷயத்தை இழுத்து கொண்டு வந்து வைத்து அடுத்தபடியான முயற்சி நடந்துவருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சிஆர் சரஸ்வதி பெயர் அடிபட்டு வருகிறது.

ஜெயலலிதா
பாக்யராஜ் காலத்தில் அவருடன் இணைந்து செயல்பட்டவர்.. ஜெயலலிதாவின் தீவிர ரசிகை.. அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தபோது இட்லி விவகாரத்தை வைத்தே பரபரப்பானவர்.. அமமுக ஆரம்பித்ததில் இருந்தே தீவிர விசுவாசி.. கட்சியின் செய்தி தொடர்பாளர்.. அமமுக சார்பில் எந்த பிரச்சனை, விவகாரம், கருத்து என்றாலும் முதலில் மீடியாக்கள் அணுகுவது சிஆர் சரஸ்வதியைதான். டிவி விவாதங்களில் ஒத்தை ஆளாக கலந்துகொண்டு, உடன் இருக்கும் எதிர்க்கட்சி நபர்களிடம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு போவார்.. டிஆர்பி ரேட்டும் எகிறிவிடும்.

விசுவாசம்
கட்சிக்கு காட்டிய நெருக்கமும், விசுவாசமும்தான், தங்கதமிழ்செல்வன் பொறுப்புக்கு இவரை நியமிக்கலாமா என்ற ஒரு யோசனை எழுந்துள்ளது. அதாவது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு சிஆர் சரஸ்வதி பெயர் அடிபடுகிறது.

புதிய பொறுப்பு?
அநேகமாக ஜூலை 4-ம் தேதி இவருக்கு அந்த புதிய பொறுப்பு தரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியே தந்தாலும், இது அவருக்கு பொருத்தமான பதவியாகத்தான் இருக்க முடியும். செய்தி தொடர்பாளராக இருக்கும்போதே எல்லாரையும் தெறிக்க விடுவார்... கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளராக உயர்ந்துவிட்டால்.. அமமுகவின் வீரியம் உயரவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.. பார்ப்போம்.. தினகரன் என்ன செய்ய போகிறார்?

தினகரன்
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது.. யார் இருந்தாலும், போனாலும் தினகரன் கவலைப்படவில்லை, கலங்கவில்லை, அதிரவில்லை, குழம்பவில்லை.. மாறாக, ஒருவர் போனால் அதை எப்படி சமாளிப்பது என்பதில் கை தேர்ந்தவராக காணப்படுகிறார். இதுதான் ஆச்சரியப்படுத்துகிறது. வரப் போகும் காலத்தில் அவரது செயல்பாடுகள் மேலும் சுவராஸ்யமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications