கவனிச்சீங்களா.. அடுத்தடுத்த சம்பவங்கள்.. பாஜகவுடன் திமுக நெருக்கம், புது இணக்கம்.. இதுதான் விஷயமாமே!
திமுகவும் பாஜகவும் இணக்கமாகி வருவது கவனத்தை பெற்று வருகிறது
சென்னை: நாளுக்கு நாள் திமுகவும் - பாஜகவும் நெருக்கமாகி கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 26ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஜுன் 3ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார்.
3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி
இதையடுத்து, கருணாநிதியின் நினைவாக ஓமந்தூரார் தோட்டத்தில் அவரது சிலையை நிறுவ திமுக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளும் துரிதகதியில் நடந்தது.
ஓமந்தூரார் தோட்டம்
தற்போது அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலையை, வருகின்ற 28ம் தேதி திறந்துவைக்கப்படுகிறது.. இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்க உள்ளார்... 1975-ம் ஆண்டிற்கு பிறகு 2022-ல் சென்னை அண்ணா சாலையில் மறுபடியும் கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பாஜக வாக்குகள்
அதேசமயம், இந்த விழாவில், வெங்கைய்யா நாயுடு கலந்து கொள்வது அதைவிட உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க போகிறது.. வெங்கய்யா நாயுடுவையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவிக்கவும் ஒரு பிளான் உள்ளதாக தெரிகிறது.. ஒருவேளை அவர் அறிவிக்கப்பட்டால், திமுகவும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாம். பாஜகவுக்கு 9,194 வாக்குகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது...
ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்
இதனால் சில மாநில கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சித்து வருகிறது... இந்த சூழலில்தான் வருகிற 28-ந்தேதி கருணாநிதி சிலையை திறக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப்படவும், அவரும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்... சில நாட்களுக்கு முன்பு, வெங்கய்யா நாயுடு சென்னை வந்தபோது, அவரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும், தன்னை குடியரசுத் தலைவராக நிறுத்தினால் ஆதரவளிக்கும்படி முதல்வரிடம் வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
அமித்ஷா
அந்த சமயத்தில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வந்திருந்தார்.. ஆனால், அவரை முதல்வரோ மற்ற அமைச்சர்களோ வரவேற்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. எனினும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த பிடிப்பு கொண்டவர்தான் வெங்கையா நாயுடு.. அவரை கருணாநிதி சிலை திறப்புக்கு அழைத்ததும், அதை அவர் ஏற்றுக் கொண்டதும் திமுக - பாஜக இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்படுகிறது. அதேநேரம், வாஜ்பாய் என்ற தனி மனிதர் எப்படி கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தாரோ அதுபோல வெங்கையா நாயுடு என்ற "ஜென்டில்மேன் பாலிடிஷியன்" திமுகவுடன் நெருக்கமாக இருப்பதில் தவறில்லை என்பது திமுகவினர் வாதமாக இருக்கிறது.
இணக்கம் - நெருக்கம்
போதாக்குறைக்கு இன்றைய தினம் வெங்கையா நாயுடு ஊட்டியில்தான் ரெஸ்ட் எடுத்து வருகிறார்.. நம் முதல்வரும் ஊட்டியில்தான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.. அநேகமாக இருவரும் சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.. எப்படி பார்த்தாலும், பாஜக - திமுகவின் இணக்கம், பல்வேறு கட்சிகளின் புருவங்களை உயர்த்தி வருகிறது... என்ன நடக்க போகிறதென்று பார்ப்போம்..!