ரசிகர்கள் செம அதிர்ச்சி.. ரஜினியை விட்டு விலகுவார்களா.. வாட்ஸ் ஆப் குரூப்களில் காரசார விவாதம்!
சென்னை: ரஜினியின் அறிக்கையால் மீண்டும் ஒரு முறை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதனால் அவர்கள் அவரை விட்டு விலகுவார்களா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.
Recommended Video

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என தெரிந்து பலர் அவரை விட்டு விலகி மாற்று கட்சிகளுக்கு சென்றுவிட்டார்கள். இன்னும் சிலர் கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி வெளியான அறிக்கைக்கு பிறகு சென்றுவிட்டார்கள்.
சிலர் தனது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாக ரஜினியே அதிரடியாக நீக்கிவிட்டார். இப்படியிருக்க ரஜினி ஆழம் பார்க்கத்தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டார் என ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

ரசிகர்கள்
ரசிகர்கள் அறவழியில் போராடினால் அவர் நிச்சயம் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை போல, ரஜினி இன்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

44 ஆண்டுகள்
இத்தனை நாட்கள் அவரையே நம்பியிருந்த ரசிகர்களை ஏமாற்றி மற்றவர்கள் முன்னால் முகத்தில் கரியை பூசிவிட்டாரே என்ற ஆதங்கம் ஒவ்வொரு ரசிகர்களிடமும் இருக்கிறது. இந்த அறிக்கை மூலம் இதுவரை 44 ஆண்டுகளில் பார்க்காத ரஜினியை இன்று ஒரே நாளில் பார்த்துவிட்டனர்.

அக்கறை
இது தொடர்பாக வாட்ஸ் ஆப் குரூப்களில் விவாதங்கள் சூடு பறக்கின்றன. இதுவரை எந்த ஒரு சூப்பர்ஸ்டாரும் தனது ரசிகர்களுக்கு இது போன்ற ஒரு விஷயத்தை செய்யவில்லை என்கிறார்கள். அண்ணாத்த படத்தை முடித்து கொடுக்க வேண்டியதில் காட்டும் அக்கறையை ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்வதில் அவர் காட்டவில்லை என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

சொந்த வேலை
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தொலைதூர ஊர்களில் வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி கொண்டு சோறு தண்ணீர் இல்லாமல் போராடிய தங்களை ரஜினி மதிக்கவில்லை என்பதே இவர்களது ஆதங்கமாக இருக்கிறது. அவர் வழியை அவர் சொல்லிவிட்டார். இனி நாமும் சொந்த வேலையை பார்ப்போம் என்று சிலர் கடந்து போக முடிவு செய்துள்ளனர்.

உசுப்பேற்றாமல்
2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துவிட்டு 3 ஆண்டுகளாக ஒரு கல்லையும் நகர்த்தாமல் இருந்ததற்கே ஹேட்டர்ஸ்களை ரசிகர்கள் நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. குறைந்தபட்சம் டிசம்பர் 3-ஆம் தேதியே இவர் ரசிகர்களை உசுப்பேற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதையும் செய்துவிட்டார்.

உடல்நிலை
தற்போது உடல் நிலை சரியில்லை என்கிறார். வயோதிகம், உடல்நிலை, கொரோனா, சிறுநீரக மாற்று சிகிச்சை இதெல்லாம் டிசம்பர் 3 ஆம் தேதியும்தானே இருந்தது. அப்போது ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என கூறிவிட்டு இப்போது கொடுத்த வாக்கை மீறலாமா என்கிறார்கள் ரசிகர்கள். டிசம்பர் 29-ஆம் தேதிதான் அவரது உடல்நிலை குறித்து அவருக்கு தெரிகிறதா.

அனல் பறக்கும் விவாதங்கள்
ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட போது கூட மக்கள் மன்றம் சார்பில் ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை. இனி ரஜினியை யாரும் கண்டுகொள்ளவே கூடாது. அண்ணாத்த படத்திற்கும் எப்போதும் போல் வரவேற்பை கொடுக்கக் கூடாது என பல அனல் பறக்கும் விவாதங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் மூலம் 44 ஆண்டுகளாக ரஜினியே கடவுள் என இருந்தவர்கள் விலகுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையிலேயே ரஜினிக்கு இது சோதனை காலம்தான்.












Click it and Unblock the Notifications