சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம்? தமிழக அரசு எடுக்கப்போகும் பெரிய முடிவு!
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் இந்த நிவாரண உதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளத்தால் கோடிக்கனக்கான பொதுச் சொத்துக்கள், மக்களின் உடைமைகள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரமும், 33%க்கு மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரமும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.37,500 நிவாரணம், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரமும், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் வசிப்பவர்களில் ஏராளமானோருக்கு சென்னையில் குடும்ப அட்டை இல்லை. சென்னையில் வாடகை வீடுகளில் வசிக்கும் அவர்களும், புயல் மழை காரணமாக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது உடைமைகளும், சேமிப்புகளும் வெள்ளத்தில் பறிபோயுள்ளன. இந்நிலையில், சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுபோல், ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தனிநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இந்த ரூ.6,000 புயல் வெள்ள நிவாரணம் வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. புயல் நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடவுள்ள அரசாணையில் முழுமையான வழிகாட்டுதல் இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications