என்ன நடக்கிறது... ஜி.கே.வாசனை உள்ளே கொண்டு வந்து.. அவர் மூலம் ரஜினியை வளைக்க டெல்லி திட்டமா?
தமிழக பாஜக தலைவர் ஆகிறாரா ஜிகே வாசன் என்பது முடிவாகவில்லை
சென்னை: ஜிகே வாசனுக்கு தமிழக பாஜக தலைமை பதவி கிடைக்கும் என ஒரு பேச்சு அடிபடுகிறது.. அப்படி கிடைத்தால் அந்த பதவியை அவர் தக்க வைத்து கொள்ள முடியுமா? தமிழிசையால் முடியாத தாமரையை இவரால் மலர வைக்க முடியுமா? முக்கியமாக எச்.ராஜா, எஸ்வி சேகர் போன்றோரை சமாளிக்க முடியுமா? என்ற பல கேள்விகள் நமக்கு எழுந்து வருகின்றன!
ஜிகே வாசன் நல்ல மனிதர்.. பெரிதாக சர்ச்சையில் சிக்காதவர்... அநாகரீகமாக பேசாதவர் என நல்ல குணங்களுடன் இருப்பவர்... மூப்பனாரின் வளர்ப்பு அப்படி!
அதே சமயம் இந்த வளர்ப்பும், அளவுக்கு அதிகமான நாகரீக போக்கும் அவருக்கே மைனஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது.. தமிழிசை போலதான்.. மனம் புண்படும்படியான விமர்சனத்தை தமிழிசை யார் மீதும் வைத்தது இல்லை.. முக ஸ்டாலினுக்கு உடனுக்குடன் பதிலடி தருவாரே தவிர, அதில் ஒரு நாகரீக போக்கு இருக்கும்.. தனிப்பட்ட தாக்குதல் இருக்காது.. சொல்ல வந்த கருத்தில் வீரியம் இருக்கும்.. ஆனால், வக்கிரம் இருக்காது.. இதுதான் தமிழிசை.. குமரியார் அவரை அப்படித்தான் வளர்த்தார்!
வாஜ்பாய்
இதே நிலைப்பாட்டையும், போக்கையும் வாசனும் தொடர்ந்து எடுப்பாரா என்பதுதான் சந்தேகமே.. பொதுவாக, பாஜகவை பொறுத்தவரை, மக்களிடம் பிரபலமும், மரியாதையும் பெற்றவரை முன்னிறுத்தியே தங்களை காரியங்களை சாதித்து கொள்வதேயே வழக்கமாக வைத்துள்ளது. அன்றைய மத்திய ஆட்சியில் வாஜ்பாய் என்ற வெள்ளை மனம் படைத்தவரின் முகம் மக்கள்முன் காட்டப்பட்டது என்றாலும், அவருக்கு பின்னே அத்வானி, முரளிமனோகர் ஜோஷியின் முகங்கள் மறைந்திருந்ததே உண்மை. அன்றைய வாஜ்பாய்க்கு வந்த அதேநிலைதான் நேற்று தமிழிசைக்கும் வந்தது.. இது இனி வாசனுக்கும் வருமா என்பதுதான் சந்தேகம்!!
எச்.ராஜா
சுப்பிரமணியசாமி, எச்.ராஜா போன்று பலமான ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை என்பதே தமிழிசையின் மைனஸ்.. அதற்காக வலிமை மிக்க இது போன்றவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளானார். இப்போது தமிழக பாஜக தலைமைக்கு வாசன் பெயர் பலமாக அடிபடுகிறது.. அடிப்படையில் நல்ல மனிதர் என்றாலும் நிர்வாகி என்ற வகையில் அவருடைய நிர்வாக திறமை பெரும் கேள்விக்குறியானதே.
தமாகா
இதற்கு உதாரணம் அவரது சொந்த கட்சியை அவரால் நடத்த முடியாமல் போனதுதான்.. காங்கிரஸில் இணைந்தார். பிறகு அங்கும் அவரால் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறினார்... மீண்டும் தமாகாவை ஆரம்பித்தார். ஆனால் இப்போது அவருடன் யாருமே இல்லை. முக்கியமானவர்கள் எல்லாம் போய் விட்டனர்
எஸ்வி சேகர்
நார்மலான கருத்துக்களைக் கூறி வந்தவர்களையே வாசனால் சமாளிக்க முடியவில்லை.. ஆனால் நாளை ஒரு வேளை பாஜக தலைவராக அவர் நியமிக்கப்பட்டால் எப்படி பாஜக தலைவர்களை முதலில் அவர் சமாளிப்பார். குறிப்பாக எச். ராஜா, எஸ்வி.சேகர் உள்ளிட்டோரெல்லாம் என்ன பேசுகிறார்கள் என்பது உலகம் அறிந்தது. அவர்களை இவரால் கண்டிக்க முடியுமா.. தமிழிசையால் கூட அது முடியவில்லையே... எனவே தமிழக பாஜகவுக்கு வாசன் தலைவராக்கப்பட்டால் அது எந்த அளவுக்கு அவருக்கும், இந்தக் கட்சிக்கும் பயன் தரும் என்பது மிகப் பெரிய விவாதத்துக்குரியது!
ரஜினிகாந்த்
ஒருவேளை ரஜினிக்கு எளிதாக இருக்கும் என்பதால் வாசனை பாஜக தலைவராக நியமிக்க நினைக்கிறார்களா என்றும் தெரியவில்லை.. அவர் ஒரு பக்கம் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி கொண்டு இருக்கிறார்..வாசன் மீது மட்டுமல்ல, மூப்பனாரிடமே பெரிய அளவுக்கு அன்பு வைத்திருந்தவர் ரஜினிகாந்த்.. இப்போது இவர்கள் எதிரும் புதிருமாக உருவாகும் நிலை வருமா? அல்லது ரஜினியை தன் கட்டுக்குள் வாசன் கொண்டு வருவாரா? அல்லது இதுவரை மலராத தாமரையை இவரால் மலருமா? என்பதெல்லாம் வாசனுக்கு தமிழக தலைமை பொறுப்பு தந்தால்தான் தெரியும்!