இதென்ன புதுஸ்ஸா இருக்கே.. "அந்த" அமைச்சர்களை குறி வைக்கும் கமல்.. எல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா..!
கமல் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: அதிமுக - திமுகவுக்கு நிகராகவே கமலின் பிரச்சாரங்கள் தற்போது கவனிக்கப்பட்டு வருகின்றன.. எனினும் மய்யம் மாற்றத்தை தருமா? மக்கள் மனசில் குடிபுகுமா? என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
இந்த முறை கமலின் அரசியலை தவிர்த்துவிட்டு, தமிழக சட்டசபை தேர்தலை எழுத முடியாது.. தனி ஆளுமையை இப்போதே வெற்றுவிட்டார்..
பெரிய கட்சிகளுடன் கமல் ஏன் கூட்டணி வைக்காமல், சின்ன சின்ன கட்சிகளை சேர்த்து கொண்டு, தேர்தலை சந்திக்கிறார்? என்ற இயல்பான கேள்விகள் எழுந்தாலும், தன்னை தேடி வந்து திமுக பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு மய்யத்தை பலப்படுத்தி வைத்துள்ளார்.

ஆலந்தூர்
ஆலந்தூரில் போட்டியிடுவார் என்றார்கள், பிறகு மதுரை என்றார்கள், அப்பறம் மயிலாப்பூர் என்றார்கள்.. இறுதியில் இதில் எதிலுமே இல்லாமல் கொங்குவை தேர்ந்தெடுத்தார் கமல்.. இதற்கு என்ன காரணம் என்று ஆரம்பத்தில புரியவில்லை.. பாஜகவுக்கு இங்கு ஓரளவு வாக்கு சதவீதம் உள்ளது.. இதுபோக இந்து அமைப்புகளின் ஓட்டுக்களும் சில உள்ளன.. அதனால், சமூக வாக்குகள் உட்பட கமலுக்கு பல வகையில் இது உதவும் என்றே கருதப்படுகிறது.

மய்யம்
இதுபோக, சென்ற முறை எம்பி தேர்தலில், கோவையில் மய்யம் பெற்ற வாக்கு சதவீதமும் அதிகம்.. அதை மனதில் வைத்து கொண்டு கமல் களமிறங்கியிருப்பார் என்றும் சொல்கிறார்கள்.. இதுபோக படித்தவர்கள், மேல்தட்டு மக்கள், உழைக்கும் மக்கள், வடமாநில தொழிலாளர்கள் போன்றோரின் ஆதரவும் கமலுக்கு என்றுமே உள்ளதையும் மறுக்க முடியாது.

கல்வி
ஆனால், இதற்கு வேறு ஒரு பின்னணி சொல்கிறார்கள்.. கல்வியிலும், பொருளாதாரத்திலும் என்னதான் கொங்கு சிறந்து விளங்கினாலும், சாதியையும், மதத்தையும் முற்றிலும் புறக்கணிக்கக்கூடிய மண்டலம் கிடையாது.. தென்மாவட்டங்களில் இருப்பதை விட இங்குதான் சாதீய உணர்வு அதிகம்.. அதேபோல அமைச்சர்களும் கிட்டத்தட்ட ஒரே சமுதாய மக்கள்தான்.. இதில் உடுமலை ராதாகிருஷ்ணனை வேண்டுமானால் தவிர்த்துவிடலாம்.. மற்றபடி எல்லாருமே ஒரே மண்சார்ந்த சாதியும், உணர்வும் மிக்கவர்களே. அதனால்தான், அதிமுகவின் பிடியில் இறுக்கமாக கொங்கு இன்றளவும் உள்ளது.

அமைச்சர்கள்
அதேசமயம், மண்டல அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்கள் உள்ளன.. இவர்கள் மீது நிறைய கேஸ்கள் ஹைகோர்ட்டில் உள்ளன.. இந்த வழக்குகளை தொடுத்ததில் பெரும்பாலும் திமுகதான்.. ஊழலை துடைப்போம் என்று மார்தட்டி களம் இறங்கி உள்ள கமல், "கொங்கு மண்டலம் ஊழலின் கோட்டையாக மாறிவிட்டது" என்று கர்ஜித்து வருவதும், இதை மாற்றவே தான் வந்திருப்பதாக சொல்வதும், குறிப்பிட்ட இந்த அமைச்சர்களை மனசில் வைத்துதான் என்கின்றனர்.

குற்றச்சாட்டு
இருந்தாலும் இதற்கு மாற்று கருத்தும் முன்வைக்கப்படுகிறது.. இந்த அளவுக்கு அமைச்சர்களை குறி வைத்து கமல் களமிறங்கினால், ஏன் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பெயரை கமல் இதுவரை பகிரங்கமாக சொன்னது கிடையாது? உதயநிதி துணிந்து நின்று, அதே கொங்குவில் பகிரங்கமாக பெயர் சொல்லி குற்றச்சாட்டை அடுக்கும்போது, கமல் ஏன் துணியவில்லை?என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

ரேஸ்கோர்ஸ்
அரசியல் காரணங்கள் இப்படி வெவ்வேறாக இருந்தாலும், கொங்குவை குறி வைத்து கமல் இறங்கி உள்ளது வீண் போகவில்லை.. ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் வாக்கிங். மீன் மார்க்கெட், ஆவின் டீக்கடை என பல இடங்களில் நடந்து போய் மக்களை சந்தித்து பேசியது. ஆட்டோவில் போனது.. மக்களுடன் செல்பி எடுத்து கொண்டது என கமலுக்கு ஏகப்பட்ட மவுசுகள் கூடி வருவதையும் மறுக்க முடியாது.
Recommended Video

ஓட்டுக்கள்
பஸ்சில் ஏறி பயணியருடன் பயணிகளுடன் பேசி கொண்டே போனது.. ஆட்டோவில் ஏறி, ஹோட்டலுக்கு திரும்பியது, டிரைவர் சிராஜுதீன் வைத்திருந்த பாக்கெட் நோட்டில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து என்பது கமலின் ஹைலைட்டாக மாறி வருகின்றன.. இன்னும் 20 நாள்தான் இருக்கிறது.. அதற்குள் எல்லா பகுதிகளையும் கமல் "கவர்" செய்துவிடுவாரா? தெற்குவை தெறிக்கவிட்டு விடுவாரா? பார்ப்போம்..












Click it and Unblock the Notifications