ராகுல் பிரதமர் வேட்பாளர்.. ஸ்டாலின் குரல்.. மெளனம் காக்கும் கட்சிகள்.. ஆளுக்கொரு கணக்கு!
மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறுமா என தெரியவில்லை.
சென்னை: ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்த மு.க.ஸ்டாலினின் ஆசை நிறைவேறுமா?
கருணாநிதி சிலை திறப்பு விழா மேடையில் ராகுல்காந்தியை பிரதமராக்குவோம். நாட்டை ராகுல் காப்பாற்ற வேண்டும். ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார் ஸ்டாலின்.
மேலும் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்று மேடையிலிருந்த மற்ற தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஸ்டாலின் எந்த நேரத்தில் இதை சொன்னாரோ, அவர் இப்படி சொன்னதும், முதல் எதிர்ப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து வெளிப்பட்டது.
எதிர்ப்பை பதிவு செய்தனர்
தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யார் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி என்று முதல்நாளே எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கருத்து சொல்லவில்லை
"ஸ்டாலின் பிரதமராக ராகுலை அறிவித்தது அவரது சொந்த கருத்து" என்று அகிலேஷ் யாதவ் சொன்னார். பிறகு ஸ்டாலினின் கருத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்த்தார். சந்திர பாபு நாயுடு, சரத்பவார் ஆகியோரும் ஸ்டாலினின் கருத்தை ஏற்பதாக இதுவரை சொல்லவே இல்லை.
2 காரணங்கள்
இத்தனைக்கும் பாஜகவுக்கு மாற்று கொண்டு வர ஒவ்வொரு அடியையும் தீவிரமாக முன்னெடுத்து செல்பவர் சந்திரபாபுநாயுடுதான். அவரே எதுவும் இதைபற்றி இன்னும் கருத்து சொல்லாமல் இருக்கிறார். இதற்கு காரணங்கள் 2 விதமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றன.
ஆளுக்கொரு ஆசை
ஒன்று, பாஜகவை அடியோடு சாய்க்க காங்கிரசின் ஆதரவு வேண்டும், ஆனால் பிரதமர் வேட்பாளர் ராகுலை ஏற்க மனமில்லாமல் இருக்கலாம். மற்றொன்று, சந்திரபாபு நாயுடு, மம்தா, அகிலேஷ் யாதவ் இவர்களுக்கெல்லாம் தாங்களே பிரதமராக வரலாம் என்ற ஆசை கூட இருக்கலாம்.
2 விதமான கணக்கு
எப்படி பார்த்தாலும் பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி, தனியாக நின்று ஜெயிக்க முடியாது என்பதே இவர்களின் கணக்காக உள்ளது. அதனால் தங்கள் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க காங்கிரசால் முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் உறவு வேண்டும், அதேசமயம், தேர்தலுக்கு பிந்தைய நிலையில் காங்கிரஸ் தயவு தேவைப்படாது என்பதே இவர்கள் கணக்காக உள்ளது.
ஸ்டாலினின் ஆசை
அதனால் பலநூறு எதிர்ப்பார்ப்புகளுடன் ஸ்டாலின் அறிவித்த அறிவிப்பு குறித்து கிட்டத்தட்ட அனைவருமே மெளனம் சாதிக்கின்றனர். காரணம், ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு உள்ளது. எனவே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் ஸ்டாலினின் குரலுக்கு எந்த அளவுக்கு வலு சேரும் என்பது போகப் போகத்தான் தெரியும்.