"அடிமடியிலேயே" கை வைத்த திமுக.. அரண்டு பார்க்கும் அதிமுக.. கொங்குவுக்கு குறி வைத்த ஸ்டாலின்..!
திமுக கொங்கு மண்டலத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: அதிமுகவின் பெருவாரியான சக்தியே கொங்கு மண்டலம்தான்.. இந்த கொங்கு மண்டலம் திமுக பக்கம் எளிதாக வந்துவிடும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. இதனால் பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நடக்க போகும் தேர்தலில் ஐந்துமுனை போட்டி நடந்தாலும், திமுக கூட்டணி - அதிமுக கூட்டணிக்கான போட்டியாகவே இது பார்க்கப்படுகிறது.. வழக்கம்போல இரு கட்சிகளும் நேரடியாக மோதி கொண்டிருக்கின்றன.
இதில் இரு முக்கிய மண்டலமான தென்மண்டலம், கொங்கு மண்டலம் இவைகளில் உள்ள வாக்கு வங்கிதான் இவர்கள் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பதை பெருமளவு தீர்மானிக்கிறது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கு சாதகமான சூழல்கள் நிறைய உள்ளன.
கொங்கு
முதல்வர் முதல் முக்கிய அமைச்சர்கள் வரை பலர் இதே கொங்குவை சேர்ந்தவர்கள்.. இந்த மண்டல மக்களுக்கு அதிமுக இந்த 4 வருட காலக்கட்டங்களில் அறிவித்த திட்டங்கள், செய்த நன்மைகள் ஏராளம்.. எனவே, இந்த முறையும் அதிமுகவின் பலமே ஓங்கும் என்ற கணிப்புகளும் வலம் வருகின்றன.. ஆனால், இதைதான் திமுக இந்த முறை நொறுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
செல்வாக்கு
இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. சென்ற முறை திமுக தோல்வியை தழுவ, இதே கொங்குமண்டலம்தான் காரணமாக அமைந்த நிலையில், இந்த முறை எப்படி திமுக இங்கு செல்வாக்கை தூக்கி நிறுத்தும் என்ற கேள்வியையும் முன்வைத்தோம். அதற்கு அவர்கள் சொன்ன கருத்துக்கள் இவைதான்.
வானதி
கொங்கு மண்டலம் அதிமுக கணிசமாக வெல்லும் என்பதை மறுக்க முடியாது.. ஆனால், கோவை மாவட்டத்தில், 7 இடங்களில் அதிமுக, திமுக மோதுகிறது.. கோவை தெற்கில் வானதிக்கு செல்வாக்கு ஓரளவு இருந்தாலும், கமல் மீதான எதிர்பார்ப்பு கூடி உள்ளது.. இவர்கள் இருவருக்கும் போட்டி அதிகமாகவும் இருக்கிறது... ஸ்டார் வேட்பாளராகவும் இவர்கள் இருக்கிறார்கள்.. விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல், சிஏஏ விவகாரம் போன்றவைகளில் பல்வேறு அதிருப்திகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில், வானதிக்கு இது தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.
தோல்வி
அதேபோல, காங்கிரஸில் மயூராவுக்கும் ஏன் சீட் தந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. ஏற்கனவே இவர் தோல்வியை சந்தித்தவர்.. அதனால், இவரது ஓட்டுக்களும் கமலுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இது வானதிக்கு சறுக்கலாக இருக்கும் பட்சத்தில் அதிமுக கூட்டணி வெற்றியை இழக்க வாய்ப்புள்ளது.. இது திமுகவுக்கு சாதகமாகிறது.
மாநில உரிமைகள்
அதேபோல, திமுகவின் பிரச்சாரங்கள், விளம்பரங்களை எல்லாம் பார்த்தால் ஒன்று நன்றாக தெரியும்.. மாநில உரிமைகளை முன்வைக்கின்றனர்.. விளம்பரம் முழுவதும் மாநில உரிமைகளை சம்பந்தப்படுத்தியே உள்ளது.. இது கொங்கு மண்டல மக்களின் கவனத்தை பெறுகிறது.. என்னதான் சலுகைகள், அறிவிப்புகளை அதிமுக செய்தாலும், மாநில உரிமை என்ற விஷயத்தில் அதிமுகவால் பதில் சொல்ல முடியாத நிலை உள்ளது.. இதிலும் அதிமுக சறுக்கி, திமுகவை உயர்த்தும் விஷயமாகவே உள்ளது.
காங்கிரஸ்
அவ்வளவு ஏன், தொண்டாமுத்தூரில் போட்டியிடும் அமைச்சர், தண்ணீராய் இறைக்கிறாராம்.. ஆனாலும் திமுக வேட்பாளருக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.. காரணம், ஊழல் பட்டியலை முன்வைத்து பிரச்சாரங்கள் நடக்கின்றன.. இதுபோக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் செல்வாக்கு கொங்குவில் ஓரளவு படர்ந்து இருப்பதாலும், திமுக இது பக்க பலமாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
ஆதி தமிழர்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, திமுக கூட்டணியில் ஆதி தமிழர் கட்சி சேர்ந்துள்ளது.. அருந்ததியர் சமுதாயத்தை முன்னிலைப்படுத்தி, அவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் இயங்கும் கட்சிதான் ஆதி தமிழர்.. கொங்கு பகுதியில் இவர்களுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.. அதனால்தான், அந்த சமுதாய மக்களுக்கு உரிய முக்கியத்துவம் தரும் வகையில்தான் ஒரு சீட் தரப்பட்டுள்ளது..
கணிப்பு
அந்த வகையில், அச்சமுதாய மக்களும் திமுகவை விட்டுவிட மாட்டார்கள். என்னதான், கொங்கு மண்டலத்தில் அதிமுக வலிமையாக இருந்தாலும், 2019 - முதல் 2021 வரையிலான செயல்பாடுகள் அந்த கணிப்பை பொய்யாக்கிவருகிறது.. இதற்கு முழு காரணம் பாஜகவுடன் அதிமுக கூட்டணியே.. அதனால்தான் இந்த முறை கொங்குவை திமுக அவ்வளவு சீக்கரம் நழுவ விட்டுவிடாது" என்கின்றனர்.