நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர உதவி செய்வீர்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: வாக்குறுதிகளை அள்ளி வீசும் பிரதமர் மோடி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவாரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அதிமுக அரசுகளின் திட்டமிட்ட சதிச்செயலால், தமிழ்நாடு இளைஞர்களின் மருத்துவக் கனவு தொடர்ந்து பாழாகி வருகிறது. மருத்துவக் கல்வி மற்றும் முதுநிலை மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிக்கும்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை வேண்டுமென்றே மத்திய பாஜக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

மன்னிக்க முடியாத செயல்
அந்த வஞ்சகச் செயலை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது. தமிழ்நாடு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துக் கல்வி குறுக்குவழியில் அநியாயமாக தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கனவு
ஒவ்வொரு வருடமும் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்று காத்திருக்கும் மாணவர்கள் கனவு சிதைந்து, கிராம மக்களின் சுகாதார தேவைகள் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி 18.02.2017 அன்று மாநில ஆளுனரால் அனுப்பி வைக்கப்பட்ட அந்த இரு மசோதாக்களின் கதி என்னவென்று இன்றுவரை தெரியவில்லை.

தமிழகத்தின் உணர்வு
குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கே அனுப்பப்படாமல் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அந்த மசோதாக்களை மத்திய பாஜக அரசு குப்பைத் தொட்டியில் வீசி அவமானப்படுத்தியிருக்கிறது. அதை கேட்க வேண்டிய முதல்வர் எடப்பாடி திரு பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசு, கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் என்பதிலேயே கவனமாக இருக்கிறது.

மாணவர்கள் குறைவு
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில், வெறும் 4 பேர் மட்டுமே அரசு மருதுவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 2200 மாணவர்களுக்கு மேல் ஒவ்வொரு வருடமும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். ஆனால், நீட் தேர்வால் 2017 - 18-ல் வெறும் 20 என்று அடியோடு குறைந்துள்ளது.

நுழைய முடியாமல் தடுப்பு
அதே நேரத்தில் மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 2016-17-ல் 14 பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். ஆனால் நீட் தேர்விற்குப் பிறகு 2017 - 18-ல் 611 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். ஆகவே, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்தல் அறிவிப்பு
ஆகவே அரசு பள்ளிகளில் படித்தாலும், தனியார் பள்ளிகளில் படித்தாலும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துக் கனவை நீட் தேர்வு என்ற கொடூர அரக்கன் கொன்று புதைத்திருக்கிறது.தேர்தல் காலத்தில் சுய ஆதாயத்திற்காக எத்தனையோ அறிவிப்புகளை வெளியிடும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டும்.

நீட் தேர்வு மசோதா
லோக்சபா தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராகி கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போதாவது, நீட் மசோதாக்களுக்கு ஒப்புதலை அளிக்க வேண்டும். அதனை கூட்டணிக்கான நிபந்தனையாக முன்வைத்து, மத்திய பாஜக அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications