ரேஷனில் பாமாயில் வாங்கியாச்சா? அரிசி அட்டைதாரர்களுக்கு இனிமே இது கிடைக்காதா? ஓடிவந்த டிடிவி தினகரன்
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் விரைவில் மாற்றம் தென்படும் என்று தகவல் வெளியாகிவரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிக முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழக தென்னைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்று தேங்காய் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தபடியே இருக்கிறார்கள்.

தேங்காய் எண்ணெய்: ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களையும் மாவட்ட வாரியாக நடத்தி வருகிறார்கள்.
தமிழக அனைத்து விவசாய சங்கமானது, சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் போராட்டத்தை நடத்தியிருந்தது. அப்போது, அச்சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாமாயிலை சாப்பிடுவதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இறக்குமதி: வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு, ரேஷனில் விற்கப்படுகிறது. இதற்கு பதிலாக, நம்முடைய விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், எள், நிலக்கடலையில் இருந்து, எண்ணெய் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்யை ரேஷனில் வழங்க வேண்டும் என்று நாலாபுறமிருந்தும் கோரிக்கைகள் எழுந்தவாறே உள்ள நிலையில், தமிழக அரசும் இதற்கு செவிசாய்க்க உள்ளதாக தெரிகிறது.
அந்தவகையில், ரேஷன் அட்டைதாரர்களின் கருத்தை அறியுமாறு ரேஷன் கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறதாம்.. முதற்கட்ட மாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய்யை வழங்கலாமா? என்பது பற்றி பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்டு வருகிறதாம்.
ஆய்வறிக்கை: இந்த மாதம் இறுதி வரை பொது மக்களின் விருப்பத்தை கேட்டறிந்து, அதன் விவரங்களை மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கையாக தொகுத்து அரசுக்கு அனுப்ப போகிறதாம். மாவட்ட கலெக்டர்களின் ஆய்வறிக்கைகள் கிடைத்த பிறகே, தமிழக அரசு இதில் இறுதி முடிவை அறிவிக்கும் என்கிறார்கள்.
ஒருவேளை, ஆய்வறிக்கை முடிவின்படி, தேங்காய் எண்ணெய் ரேஷனில் வழங்கப்பட்டால், பாமாயில் இனி வழங்கப்படுமா? அல்லது பாமாயிலும் சேர்த்தே வழங்கப்படுமா? என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், பாமாயிலை தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை விடுக்க துவங்கியிருக்கின்றன. அந்தவகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பாமாயில்: "தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான பருப்பு மற்றும் பாமாயிலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நியாய விலைக்கடைகளில் பருப்பு, மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு எழுந்த நிலையில், அதனை சீர்செய்ய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசால் ஏழை, எளிய பொதுமக்கள் தற்போது மீண்டும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வாக்குறுதி: நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு உயர்த்தப்படுவதோடு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வந்த பாமாயில் மற்றும் பருப்பு விநியோகத்தையும் நிறுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு, பாமாயிலை வாங்குவதற்காக நியாய விலைக்கடைகளுக்கு வரும் சாமானிய மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையில், ஒரு சிலர் நியாய விலைக்கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கோரிக்கை: எனவே, நியாயவிலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று டிடிவி தினகரன் அதில் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications