இப்படி ஒரு சான்சை தவறவிட்டுட்டாரே ரஜினிகாந்த்!
Recommended Video

சென்னை: வருங்கால அரசியல்வாதி ரஜினிகாந்த், தமிழகத்திற்கு உதவி செய்ய கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டுள்ளார்.
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா! என்று பாடி உருகிய ரஜினிகாந்த்துக்கு, அந்த தமிழர்களுக்கு உதவ கிடைத்த அருமையான வாய்ப்பு கை நழுவியுள்ளது.
அரசியலுக்கு வருகிறேன், தனிக்கட்சி தொடங்குகிறேன் என்று கடந்த வருடம் டிசம்பர் 31ல் ஆவேசமாக அறிவித்தார் ரஜினிகாந்த். ஆனால், அறிவித்து ஓராண்டு ஆன பிறகு இதுவரை இரு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. இன்னும் ஒரு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தமிழர் பிரச்சினைகள்
அரசியலுக்கு வருவேன், அதுவும் தேர்தல் காலத்தில்தான் வருவேன் என்று சொல்லி வரும் ரஜினிகாந்த், தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கூட குரல் கொடுப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல்வாதியாகப்போவதாக கூறிவிட்டு தூத்துக்குடியில் 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு கூட போகாமல் இருந்தவர் ரஜினிகாந்த். விமர்சனங்கள் அதிகரித்ததால், ஆறுதல் கூறுவதற்காக செல்கிறேன் என்று தாமதமாக சென்றார். ஆனால் போராட்டம் நடத்தியவர்களையே கொச்சைப்படுத்திவிட்டு திரும்பினார்.

கஜா புயல்
இப்போது கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. 20 வருடங்கள் பின்நோக்கி போயுள்ளன அப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலை. முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பல முறை டெல்டா மாவட்டங்களை நேரில் பார்வையிட்டு திரும்பியுள்ளனர். சமீபத்தில் கட்சி துவங்கிய கமல்ஹாசனும் பல முறை சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை பார்த்து அறிந்து கொண்டார்.கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் உதவி கேட்டார். ரூ.10 கோடி உதவியளிப்பதாக கூறினார் பினராயி விஜயன். ஆமீர்கானும் கஜா புயல் சேதம் குறித்து ட்வீட் செய்து அகில இந்திய அளவில் கவனம் பெற வகை செய்து உதவிக்கான வாசல்களை திறந்துவிட்டுள்ளார்.

கஜா பாதிப்பு
ஆனால், வந்தால், தமிழகத்தின் முதல்வராகத்தான் வருவேன் என்ற கனவில் இருக்கும் ரஜினிகாந்த் செய்தது என்ன? இதுவரை கஜா புயல் பாதித்த இடங்களை அவர் சென்று ஒருமுறையாவது பார்த்தாரா? என்றால், இல்லை என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும். நடிகராக மட்டுமே இருந்தால், ரஜினிகாந்த் போனாலும் போகாவிட்டாலும் பிரச்சினை இல்லை. அரசியலுக்கு வருகிறேன், 90 சதவீத கட்சி பணிகள் முடிந்துவிட்டது என்று அறிவித்த ரஜினிகாந்த் போகாததுதான் இங்கு பிரச்சினை.

மோடியின் நண்பர்
ரஜினிகாந்த் போவதால் அந்த மக்களுக்கு என்ன நன்மை என்று அடுத்த கேள்வி எழக்கூடும். ரஜினிகாந்த் நினைத்தால் அந்த நன்மை நடந்துதான் இருக்கும். காரணம், கமல்ஹாசன் உதவி கேட்கும் இடத்தில் பினராயி இருந்தால், ரஜினிகாந்த் உதவி கேட்கும் இடத்தில் நாட்டின் பிரதமர் மோடியே உள்ளாரே! கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழகம் வந்த மோடி, சென்றது ரஜினிகாந்த் வீட்டுக்கு மட்டும்தான். எனது நல்ல நண்பர் என்று மோடியே புகழ்ந்துரைத்த நபர்தான் ரஜினிகாந்த்.

உதவி கிடைத்திருக்கும்
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் சென்று, பாதிப்புகளை உள்வாங்கிக் கொண்டு, பிரதமரை நேரில் சென்று சந்தித்து உதவி கேட்டிருக்க முடியும். இதன் மூலம், தமிழகம் முழுக்க மட்டுமின்றி, தேசிய அளவிலும் இந்த சந்திப்பு உன்னிப்பாக கவனிக்கப்பட்டிருக்கும். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ரஜினிகாந்த் உதவி கேட்டால் இன்னும் அதிக உதவியை மத்திய அரசு தமிழகத்திற்கு செய்திருக்க வாய்ப்பு இருந்தது. இதனால் மக்களுக்கு நல்லது என்பதோடு, ரஜினிகாந்த்துக்கும் நற்பெயர் கிடைத்திருக்கும். அது வருங்கால அரசியலுக்கும் உதவியிருக்கலாம். ஆனால், எந்த நன்மைக்கும் வழி செய்யாமல் பேட்ட படத்தின் பாடல்களை கேட்டு ரசிப்பதில் காலம் கடத்தி வருகிறாரே உச்சநட்சத்திரம். இது உச்சபட்ச கொடுமையல்லவா?












Click it and Unblock the Notifications