இலவு காத்த கிளியான எடப்பாடி! அண்ணாமலை எடுத்த சர்வே! 3 தொகுதிக்கு ஸ்ரீதர் வேம்பு செக்!
'ராமர் கோவில்' திறப்பு விழா மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது பாஜக. திமுக இளைஞரணி மாநாடு மூலம் தேர்தல் களத்திற்குத் தயாராகிவிட்டது திமுக.
மதுரையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சி மாநாடு மூலம் ஒரு தேர்தல் ஒத்திகைப் பார்த்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுகவைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பற்றி கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த அதிமுக குழுவையும் அறிவித்துள்ளது.

குழுதான் கண்ணில் தெரிகிறது. ஆனால், கூட்டணி புழு வளர்ந்து பெரிய பட்டாம்பூச்சியாக வானில் பறக்குமா என்ற சந்தேகம் தான் இப்போதுவரை அதிமுகவில் நிலவுகிறது. இப்போதைக்கு அதிமுக அணியில் எஸ்டிபிஐ கட்சி இருக்கிறது என்பது மட்டும் உறுதி.
இதே கூட்டணிக்குள் தேமுதிக இருக்கிறதா? புதிய தமிழகம் இருக்கிறதா? அல்லது வேறு எந்த எந்தக் கட்சிகள் அதிமுக அணிக்குள் உள்ளன என்பதே இன்னும் தெளிவாகக் கண்ணுக்கு எட்டியவரைத் தெரியவில்லை.

ஒரு காலத்தில் 'கண்ணுக்கு எட்டிய தூரத்தில் அதிமுகவுக்கு எதிரிகளையே காணோம்' என்றார் ஜெயலலிதா. இன்றைக்குக் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கூட்டணிக்கு யாருமே இல்லை என்ற நிலைதான் அதிமுகவில் உள்ளது.
தேமுதிக, இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் அதிமுக பக்கம் அதிகம் செலுத்துவதைப் போல் தெரியவில்லை. அவர்கள் விருப்பம் எல்லாம் பாஜக கூட்டணியைச் சார்ந்தே இருந்து வருகிறது. இந்தக் கட்சியைப் போலவே புதிய தமிழகம் கூட பாஜகவைத்தான் அதிகம் நம்பி இருக்கிறது.
டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கம் போல் தென்காசி தொகுதியைக் குறிவைத்துக் காத்திருக்கிறார். இந்த முறை அந்தக் குறியில் சின்ன மாற்றம் இருக்கும் என்கிறார்கள். அந்த மாற்றம் என்ன தெரியுமா? அவருக்குப் பதிலாக அந்தத் தொகுதியில் அவரது மகன் ஷாம் களத்தில் நிறுத்த இருக்கிறார் டாக்டர்.

பாமகவின் தேர்வு பட்டியலில் முதல் இடம் பாஜகவுக்கு இருப்பதாகவே சொல்கிறார்கள். அவர்களின் அரசியல் 'மூவ்'வும் அப்படித்தான் உள்ளது. அவர்கள் அதிமுக பக்கம் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
ஸ்ரீதர் வேம்பு. அவரது நண்பர் ஆனந்தன் அய்யாசாமி. இவரும் டாக்டர் கிருஷ்ணசாமி வகுப்பைச் சேர்ந்தவர். இந்த அய்யாசாமிக்காக ஸ்ரீதர் வேம்பு பாஜகவில் சீட் கேட்கிறார். அதற்கான முழு செலவையும் அவரே ஏற்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மேலும் வேம்பு தனது கட்டுப்பாட்டில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளைக் கேட்கிறார். அதற்கான முழு செலவையும் அவரே செய்து கொள்வதாக வாக்களித்திருக்கிறார் என்றார்கள் அரசியல் வியூகங்கள்.
இதனால், பாஜகவுக்குள் சின்ன குழப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாகத் தென்காசி என்றால் அது டாக்டர் கிருஷ்ணசாமிதான். அவரது மகனைக் களம் இறக்க அவரும் விரும்பும் நேரத்தில், ஸ்ரீதர் வேம்பு மூலம் சின்ன தர்மசங்கடம் உருவாகி உள்ளது.
இதனால், அவர் பாஜகவினை விட்டு விட்டு, அதிமுக பக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அதிமுக தரப்பு முன்னாள் அமைச்சர் ஒருவர் வாட்ஸ் அப் தகவலை ஊடக நண்பர்களுக்குத் தட்டி விட்டு வருகிறார்.
இதனிடையே பாஜக அண்ணாமலை ஒரு கூட்டணியைக் கட்டமைத்து வைத்துள்ளார். அதில், அதிமுக இல்லை. தேமுதிக, பாமக, ஐஜேகே, டிடிவி, சசிகலா, ஒபிஎஸ், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதை அண்ணாமலை அறிவிக்கத்தான் இல்லை.

ஆனால், அந்தத் திட்டத்தை பாஜக தேசிய தலைமைக்கு அனுப்பிவைத்துவிட்டார். அவர்களோ இதற்கு எந்த ஒப்புதலையும் வழங்காமல் மவுனம் காத்து வருகிறார்கள்.
இந்தக் கூட்டணிகள் மோடிதான் மீண்டும் பிரதமர் என்பதில் உறுதியாக உள்ளனர். அதன்படி இக்கூட்டணி தேர்தலில் நின்றால், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்று ஒரு சர்வே எடுத்து தலைமைக்கு அண்ணாமலை அனுப்பி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இதனிடையே ஐஜேக பாரிவேந்தர் பச்சைமுத்து, பெரம்பலூர் மீண்டும் போட்டி இடுவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். அது மட்டும் அல்லாமல் அவர் மேலும் பாஜக கூட்டணிக்காக 2 தொகுதிகளுக்கான செலவுகளைத் தானே செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் என்கிறார்கள்.

இந்த முறை தேர்தல் களத்தில் போட்டி பலமாக இருக்கும் என்பதால், தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இந்தத் தொகுதிக்கு என்ன என்ன திட்டங்கள் வந்தன?
இந்தத் தொகுதியில் உள்ள ஏழை மாணவர்கள் எத்தனைப் பேருக்கும் தனது எஸ் ஆர் எம் கல்லூரியில் இலவசமாகப் படிக்க சீட் வழங்கப்பட்டன? அவர்கள் எந்தளவுக்கு முன்னேறி உள்ளன? என்பது பற்றிய அத்தனை விவரங்களையும் பாஜக கட்சித் தலைமைக்கு அளித்துள்ளார் பச்சைமுத்து.
அந்த விவரங்களைத் தொகுதி முழுக்க விநியோகம் செய்யவும் திட்டமிட்டு வருகிறார். இதனால், பாஜகவுக்கு மூன்று தொகுதிகள் செலவே இல்லாமல் களம் காணப் போகிறது என்றும் தகவல் உலா வருகிறது.

இதனிடையே விசிகவை தன் பக்கம் இழுக்க அதிமுக பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், விசிக நிலையாக திமுக பக்கம் இருக்கும் என்று இரண்டாம் கட்ட தலைவர்களே எடப்பாடி தரப்புக்குப் பதில் சொல்லிவிட்டார்களாம். இதனால், அந்தக் கதவு அதிமுகவுக்கு அடைக்கப்பட்டுவிட்டது.
இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் 10 தொகுதிகளுக்கு மேல் எடப்பாடி அணிக்குப் பின்னடைவு ஏற்படும் என்று சொல்கிறார்கள். காரணம், சசிகலா, டிடிவி, ஒபிஎஸ் ஆகிய மூவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மூவரையும் திட்டமிட்டு எடப்பாடி வெளியேற்றிவிட்டார்.

ஆகவே, அவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எடப்பாடிக்குப் பாடம் புகட்டக் காத்திருப்பதாகவும், அதனால் 10 தொகுதிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
முக்குலத்தோர் சமுகத்தின் ஆதரவு இல்லை என்பதால்தான், அடுத்து என்ன செய்யலாம் என யோசித்த எடப்பாடி பழனிசாமி, நாடார் சமுதாயத்தை தன் பக்கம் இழுக்கும் காரியத்தில் இறங்கி உள்ளார்.

அதற்காகவே அய்யா வைகுண்டம் பூசையைக் கையில் எடுத்துள்ளார். பாஜக ராமரைக் கையில் எடுத்த அதே நாளில் இவர் அய்யா வழியைக் கையில் எடுத்துள்ளார். அது எந்தளவுக்கு அவரைக் காப்பாற்றும் என்பது தெரியவில்லை.
ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், எடப்பாடி தலைமையிலான அதிமுக பக்கம் தமீமுன் அன்சாரி இருக்கிறார். அடுத்து எஸ்டிபிஐ உள்ளது. புரட்சி பாரதமும் அதிமுக பக்கம் உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் திமுக கூட்டணி பலமாக இருக்கிறது. அதில் உள்ள கட்சிகள் தமிழ்நாட்டில் வலுவான வாக்கு வங்கிகளை வைத்துள்ளன. அதனுடன் போட்டிப் போட அதிமுகவுக்கு ஆயிரம் யானை பலம் தேவை! அது கிடைக்குமா?












Click it and Unblock the Notifications