சுங்கச்சாவடியில் 3000 பாஸ் கட்டணத்தை 1500 ஆக குறைக்குமா மத்திய அரசு.. வணிக வாகனங்களுக்கு கிடைக்குமா?
சென்னை: சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். தனியார் வாகனங்களை பொறுத்தவரை (ஓன் போர்டு வாகனங்கள் உள்ளிட்டவைகள்) சுங்கச்சாவடியை பயன்படுத்தும் காலம் சொற்பமாக உள்ளதால் இந்த கட்டணம் மிகவும் கூடுதலான தொகை என்றும், வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கும் இந்த 3000 ரூபாய் பாஸை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நமது நாட்டில் சேலம் மாதிரி சுங்கச்சாடி நிறைந்த நகரங்களுக்காகவே ஒரு திட்டத்தைத்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிவித்தார். அந்த அறிவிப்பு, 60 கி.மீ. தூரத்துக்குள் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்துவது தொடர்பாக கார், ஜீப், வேன் போன்ற வணிகம் அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்க போகிறது. இதுபற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறுகையில், "ரூ.3000க்கு 'பாஸ்டேக்' அடிப்படையிலான வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ், வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

3000 ரூபாய் டோல்கேட் பாஸ் பெறுவது
இந்த திட்டப்படி வணிகம் அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள், இந்த 3000 ரூபாயை பாஸை பெற்றுக்கொள்ளலாம். இந்த பாஸை 'ஆக்டிவேட்' செய்த தேதியில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது 200 முறை பயணம் செய்வதற்கோ, எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை 'ஆக்டிவேட்' செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும் 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற ஆப்பை பயன்படுத்தலாம். இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் விரைவில் 'லிங்க்' வெளியிடப்பட உள்ளது.
சுங்கச்சாவடிகள்
இந்த 3000 ரூபாய் பாஸ் திட்டம் காரணமாக சுங்கச்சாவடிகளில் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. காத்திருப்பு நேரம் குறையும். நெரிசல் குறையும். லட்சக்கணக்கான தனிநபர் பயன்பாட்டு வாகன உரிமையாளர்களுக்கு விரைவான, சுமூகமான பயண அனுபவத்தை அளிக்கும்" என்று கூறியிருந்தார்.
விதிமுறை என்ன
இந்த அறிவிப்பு தனிநபர் வாகனங்களுக்கே செல்லுபடியாகும் என்றும் நிதின்கட்காரி கூறியுள்ளார். இந்நிலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு கார், ஜீப், வேன் ஆகியவைகளுக்கு சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூபாய் 3,000 என்றும் அல்லது சுங்கச் சாவடியை 200 முறை வரை கடக்கலாம் என்றும் புதிய விதியினை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.
1500 ஆக குறைக்க வேண்டும்
தனியார் வாகனங்களை பொறுத்தவரை (ஓன் போர்டு வாகனங்கள் உள்ளிட்டவைகள்) சுங்கச்சாவடியை பயன்படுத்தும் காலம் சொற்பமாக உள்ளதால் இந்த கட்டணம் மிகவும் கூடுதலான தொகையாகும். எனவே இந்த வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1,500 வீதம் நடைமுறைப்படுத்துவதே சிறந்த வழிமுறை என கருதுகிறேன்.
அதோடு, மேலே குறிப்பிட்ட தனியார் வாகனங்களுக்கு 3,000 ரூபாய் ஆண்டுக்கு கட்டணம் என்பதனை வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தினால் அவர்களுக்கான நிதி சுமை குறையும் என்பதனை கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications