பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? ஒரே வரியில் பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்!
சென்னை: மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைமையிலான அரசு ஏற்கிறதா? என்று கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் (NEP 2020) முக்கிய அம்சங்களை அடிமட்ட அளவில் முழுமையாகச் செயல்படுத்துவதற்கான 'மாதிரிப் பள்ளிகளாக' பிஎம்ஸ்ரீ பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் இந்த திட்டத்தை முந்தைய திமுக அரசு கடுமையாக எதிர்த்து வந்தது. இந்நிலையில் புதியதாக அமைந்திருக்கும் தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விகள் எழுந்திருந்தன.

இதற்கு பதிலளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "இருமொழிக்கொள் என்பது பள்ளி கல்வியில் மட்டும் கிடையாது, தமிழ வெற்றிக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. உறவுகளுடன் பேச தாய் மொழி, உலகத்துடன் பேச ஆங்கிலம் என்பதுதான் கொள்கை" என்று பதிலளித்துள்ளார்.
பிஎம்ஸ்ரீ VS தமிழ்நாடு
பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டால், இந்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் பள்ளிகள் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. சூரிய மின்சக்தி தகடுகள், எல்.இ.டி விளக்குகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், மற்றும் கழிவு மேலாண்மை போன்ற சூழல் நட்பு உள்கட்டமைப்புகள் இதில் இடம்பெறும்.
நவீன ஆய்வகங்கள், டிஜிட்டல் வகுப்பறைகள், கணினி மையங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும். வெறும் மனப்பாடக் கல்வியைத் தவிர்த்துவிட்டு, விளையாட்டு வழி கற்றல், கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், மற்றும் ஐசிடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி முறைகள் இங்குப் பின்பற்றப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.
என்னதான் விளக்கம் கொடுத்தாலும், இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மும்மொழிக்கொள்கையை அமலாக்க வேண்டும் என்பதுதான் இதில் இருக்கும் பெரிய சிக்கல். தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 60 ஆண்டுகளாக இருமொழிக்கொள்யை நாம் பின்பற்றி வருகிறோம். ஆனால், இந்த திட்டத்தில் இந்திய மொழிகள் 2, வெளிநாட்டு மொழி 1 கற்பிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டு மொழி எனில், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாது. அதேபோல, இந்திய மொழியில் 2 எனில், ஒன்று தமிழ் மொழி வந்துவிடும். மற்றொரு மொழி என்ன என்பதுதான் கேள்விக்குறி. இந்த திட்டத்தை ஆதரிக்கும் பலரும், ஏன் தெலுங்கு கற்கலாமே! மலையாளம் கற்கலாமே! என்று கூறுகின்றனர். இப்படி கற்பது குழந்தைகளுக்கு தேவையற்ற சுமை என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். எனவே இருமொழிக்கொள்கையை தமிழ்நாடு அரசு தொடர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த திட்டத்தை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதி விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications