தினகரன் முகாமை காலி செய்ய வைக்கும் அழைப்பு... பலிக்குமா அதிமுக கனவு!
சென்னை : உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தினகரன் அணிக்கு சென்றவர்களுக்கு அதிமுக பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. குழம்பிய குட்டையில் தூண்டில் போடும் அதிமுகவிற்கு சிக்குமா அமமுக மீன்கள் என்பது தான் தெரியவில்லை.
டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தெம்பாக நம்பி இருந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு அவர்களின் காலை வாறிவிட்டது. தகுதி நீக்கம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதால் அதிமுக தரப்பு படுகுஷியில் உள்ளது. எனினும் விட்டுக் கொடுக்காத தினகரன் முகாம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
18 எம்எல்ஏக்கள் தப்பு செய்யவில்லை என்பதை நிரூபிக்கவே மேல்முறையீடு செய்ய முடிவு செய்தோம், தேர்தல் வந்தால் வழக்கை வாபஸ் பெற்று தேர்தலை சந்திப்போம் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இதனிடையே அதிமுகவில் இருந்து மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கியவர்கள் மீண்டும் கட்சியில் வந்து இணையலாம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒற்றுமையோடு இருக்கிறோம்
அதிமுகவின் இந்த அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த தினகரன் முகாமைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அவர்களது அழைப்பை ஏற்று நாங்கள் யாரும் செல்லமாட்டோம் என்றும் மதுரையில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் சேர அழைப்பு
உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எதார்த்தம் என்ன என்பதை உணர்த்துவதாக கூறி பதவி இழந்து தவிப்போர்கள் மனதில் ஆசையை விதைத்துள்ளது அதிமுக. இவர்களின் ஆசைக்கு அமமுகவில் இருப்பவர்கள் ரியாக்ஷன் இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை.
உண்மை நிலவரம் என்ன?
நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று தங்கதமிழ்செல்வன் கூறுவது அவரின் கருத்தா, உண்மையில் அவர்களுக்குள் எந்த பூசலும் இல்லாமல் ஒற்றுமையுடன் தான் இருக்கிறார்களா என்பது புரியாத புதிர். அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என்று 3 அணிகளாக இருந்த போது அணி அணியாக மாறிய பல அரசியல்வாதிகளையும் தமிழகம் கண்டுகொண்டு தான் இருக்கிறது.
அதிமுகவின் சாமர்த்தியம்
தினகரன் அடிக்கடி சொல்வது அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதே. இதே போன்று தினகரனின் பொதுக்கூட்டங்களுக்கும் எப்படியாவது கூட்டம் சேர்ந்தும் விடுகிறது. இந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் சோர்ந்து போயுள்ள தினகரன் முகாமில் குழம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் அதிமுகவில் மீண்டும் இணையலாம் என்ற தூண்டிலை போட்டுள்ளது அதிமுக இதில் அமமுக மீன்கள் சிக்குமா என்பதே அடுத்தடுத்த அரசியல் சுவாரஸ்யங்களாக காத்திருக்கின்றன. வந்த வரை லாபம் என்பதற்காக அதிமுக இந்த அழைப்பை விடுத்திருக்கிறதா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்.