Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளவங்கோடு இடைத்தேர்தலில் விஜய்? திமுக, அதிமுக ரூட்டில் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க பிளான்? ஆஹா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலோடு இணைந்து விளவங்கோடு இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இடைத்தேர்தலில் களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடாது என்றும், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அறிவித்துள்ளார் விஜய். சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Will Vijay led TVK contest in Vilavancode by election

விஜய், தவெக கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்ப்ரைஸாக வந்த இடைத்தேர்தல்: 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என விஜய் அறிவித்திருந்தாலும், எதிர்பாராவிதமாக சட்டமன்ற இடைத்தேர்தல் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவாக விஜயதரணி, பாஜகவுக்கு தாவியுள்ளதால் அவரது எம்.எல்.ஏ பதவி காலியானது. இதனால் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது விளவங்கோடு இடைத்தேர்தல், தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலோடு இணைந்து வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்றே நடைபெற உள்ளது.

திடீர் வாய்ப்பாக வந்துள்ள விளவங்கோடு இடைத்தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் உள்ள நிலையில், கட்சி தொடங்கிய சூட்டோடு சூடாக, விளவங்கோடு இடைத்தேர்தலில் களமிறங்கி, விஜய் மற்ற அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.

இடைத்தேர்தல் மூலம் தான் திமுக, அதிமுகவே ஆட்சியை பிடித்தது: தமிழ்நாட்டை கடந்த அரை நூற்றாண்டு காலமாக மாறி மாறி ஆண்டு வரும் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்குமே, இடைத்தேர்தல்கள் பெரிய அளவில் திருப்பு முனையைக் கொடுத்திருக்கின்றன. திமுகவுக்கு திருவண்ணாமலை இடைத்தேர்தல், அதிமுகவுக்கு திண்டுக்கல் இடைத்தேர்தல்.

எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய புதிதில், 1973ல் திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதுதான், அதிமுக போட்டியிட்ட முதல் தேர்தல். இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி ஜெயிக்கும் என்ற பொது வழக்கத்தை உடைத்து வென்றது அதிமுக. அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ஆளும் கட்சியான திமுக வேட்பாளர் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முதல்வரான எம்ஜிஆர்: தமிழ்நாட்டின் அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இடைத்தேர்தல் என்ற பெருமை இன்றளவும் திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு உள்ளது. அதன்பிறகு, 1974ல் கோயம்பத்தூர் மேற்கு சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன்பிறகு 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு, எம்ஜிஆர் மறைவு வரை அதிமுக ஆட்சியை அசைக்க முடியவில்லை.

திமுகவுக்கும் ஆரம்ப காலத்தில் இடைத்தேர்தல் கை கொடுத்திருக்கிறது. 1957 முதல் திமுக தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. முதல் தேர்தலில் திமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சைகளாக போட்டியிட்டு 2 பேர் வென்றனர். 1962 பொதுத் தேர்தலில் 13 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபைக்குச் சென்றது திமுக. காங்கிரஸ் கட்சி காமராஜர் தலைமையில் ஆட்சி அமைத்தது.

திமுகவுக்கு திருப்பம் கொடுத்த திருவண்ணாமலை இடைத்தேர்தல்: அதன்பிறகு நடந்தது ஒரு திருப்பம். 1963ஆம் ஆண்டு திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி பிள்ளை மறைவு காரணமாக அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிரமாக தேர்தல் பணியாற்றியது.

ஆனால், இடைத்தேர்தல் முடிவு ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கும், அன்றைய முதல்வர் காமராஜருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. திமுக சார்பில் போட்டியிட்ட ப.உ.சண்முகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தல் வெற்றியை திருவிழா போல கொண்டாடியது திமுக. தமிழகம் முழுக்க வெற்றிப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அண்ணா சொன்னது நடந்தது: காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து வருகிறது என்பதையே இந்த இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது என்றும் இனி வரப்போவது திமுக ஆட்சி தான் என்றும் காங்கிரஸ் இனி எழுந்திருக்கவே முடியாது என்றும் திமுக தலைவர்கள் மேடைகள் தோறும் முழங்கினர். அடுத்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு ஓடுகிற அளவிற்கு தி.மு.கழகம் பலம் பெற்று வருகிறது என்று பேசினார் அண்ணாதுரை.

அறிஞர் அண்ணா சொன்னதுதான் அதன் பிறகு நடந்தது. 1967 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு, காங்கிரஸால் தமிழ்நாட்டில் ஆட்சி அரியணையை தொடக் கூட முடியவில்லை. இன்றளவும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது கனவாகவே இருந்து வருகிறது.

இடைத்தேர்தல் அதிசயம்: இப்படியாக இடைத்தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி, ஒரு நூற்றாண்டு கட்சியையே, அரை நூற்றாண்டாக இங்கு ஆட்சிக்கு வர விடாமல் செய்திருக்கிறது. அதேபோலத்தான், அதிமுகவுக்கு, திண்டுக்கல், கோவை இடைத்தேர்தல்கள் அளித்த முடிவும். இடைத்தேர்தல்கள் தான் இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தை நோக்கிய பாதையை அமைத்துக் கொடுத்திருக்கின்றன என்பது வரலாறு.

இந்நிலையில் தான், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இருக்கும் இந்தத் தருணத்திலும் இடைத்தேர்தல் வந்துள்ளது. தமிழ்நாட்டை ஆளும் கனவோடு, எம்ஜிஆரின் பாதையில் அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், இந்த பிரமாதமான வாய்ப்பைப் பயன்படுத்தி, விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+