விஜய் உஷாரா இருக்கனும்! சிபிஐ விசாரணைக்கு பின்.. பாஜக பக்கம் பல்டி அடித்த அரசியல் தலைவர்கள்!
சென்னை: கரூர் நெரிசல் பலி வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை, நீதி வெல்லும் என்று விஜய் வரவேற்றிருந்தார். தவெக-வினரும் சிபிஐ விசாரணையை வரவேற்றிருந்தனர். ஆனால், கடந்த காலங்களில் சிபிஐ விசாரணைக்கு பின்னர் பல முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் ஐக்கியமாகியிருக்கின்றனர். அந்த வகையில் விஜய் உஷாராக இருக்க வேண்டிய இடம் இது என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்ட பின்னர் பாஜகவில் இணைந்த மாற்று கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களின் பட்டியலை கடந்த ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகம் வெளியிட்டிருந்தது.

பாஜகவில் இணைந்த பெத்த கைகள்
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஊழல் குற்றச்சாட்டுகளில் மத்திய ஏஜென்சிகளின் விசாரணைக்குள்ளான 25 முக்கிய அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக, காங்கிரஸில் இருந்து 10 பேர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவில் இருந்து தலா நான்கு பேர், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து மூன்று பேர், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து இரண்டு பேர், சமாஜ்வாடி கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்த 25 வழக்குகளில் மூன்று வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. மற்ற 20 வழக்குகள் முடங்கியுள்ளன அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளன. கட்சி மாறிய பிறகு, விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை செயலற்றதாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 6 அரசியல் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். இது நாடாளுமன்ற தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக நடந்தது.
சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை
இதை இன்னும் சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும் எனில், சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். 2014 க்குப் பிறகு, அதாவது பாஜக தலைமையிலான NDA ஆட்சிக்கு வந்த பிறகு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ எடுத்த நடவடிக்கைகளில் 95% எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராகவே இருந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை எடுத்துக்கொண்டால், அங்கு 2022-2023ம் ஆண்டு நடந்த அரசியல் மாற்றம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. 2022 இல், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவு பாஜகவுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்தது. ஒரு வருடம் கழித்து, அஜித் பவார் தலைமையிலான NCP பிரிவு NDA கூட்டணியில் இணைந்தது. NCP பிரிவின் இரண்டு முக்கிய தலைவர்களான அஜித் பவார் மற்றும் பிரபுல் படேல் மீதான வழக்குகள் பின்னர் முடித்து வைக்கப்பட்டன.
மகாராஷ்டிராவில் நடந்த மாற்றம்
இந்த 25 பேர் கொண்ட பட்டியலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 12 முக்கிய அரசியல்வாதிகள் உள்ளனர். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 4 பேர் இந்த லிஸ்டில் இருக்கின்றனர். மொத்தம் 12 பேரில் 11 பேர் 2022 அல்லது அதற்குப் பிறகு பாஜகவுக்கு மாறினர். அதேபோல மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவர் மீது ஆதர்ஷ் வீட்டுவசதி வழக்கில் CBI மற்றும் ED விசாரணைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்கம் + அசாம்
அப்படியே மேற்கு வங்க மாநிலத்திற்கு வருவோம். அங்கு, சில வழக்குகள் பெயரளவுக்கு பதியப்பட்டிருந்தாலும், வழக்கு விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை. உதாரணமாக, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மீதான நாரதா ஊழல் வழக்கில், மக்களவை சபாநாயகரிடம் இருந்து 2019 ஆம் ஆண்டு முதல் அனுமதி பெற CBI காத்திருக்கிறது. அதிகாரி 2020 இல் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறினார். அவர் குற்றம் சாட்டப்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இப்போது இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.
அசாம் பக்கம் வந்தால், அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீதான வழக்கும், தேக்கமடைந்துள்ளது. பிஸ்வா சர்மா, சாரதா சிட் ஃபண்ட் ஊழல் வழக்கில் 2014 இல் CBI விசாரணையையும், ரெய்டுகளையு் எதிர்கொண்டார். ஆனால், 2015 இல் பாஜகவில் இணைந்த பிறகு அவர் மீதான வழக்கு அப்படியே கிடக்கிறது. இதில் விதி விலக்கான விஷயம் என்னவெனில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜோதி மிர்ஹா மற்றும் முன்னாள் TDP எம்.பி. ஒய்.எஸ். சௌதரி ஆகிய இரு வழக்குகளில் மட்டும், அவர்கள் பாஜகவில் இணைந்த பிறகும் ED யின் நடவடிக்கை நீடித்து வருகிறது என்பதுதான்" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்திருக்கிறது.
விஜய் உஷாரா இருக்கனும்
எப்படி இருப்பினும் பாஜகவில் இணைந்தவர்களின் வழக்கு விசாரணைகள் ஒன்று முடித்து வைக்கப்படுகின்றன, அல்லது தாமதமாகின்றன. அப்படி இருக்கும்போது சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கரூர் வழக்கு விசாரணை வருகிறது. இதனை தவெக கொண்டாடுகிறது. அப்படியெனில் எதிர்காலத்தில் தவெக-பாஜக உறவு நிச்சயம் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் பாஜக வலுவாக காலுன்ற விஜய்யை அக்கட்சி பயன்படுத்திக்கொள்ளும், அதற்காகவே சிபிஐ உள்ளே வருகிறது என்றும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications