பெரும்பான்மை கிடைக்காவிட்டால்.. ஆட்சியை உதறிவிட்டு கெஜ்ரிவால் மாதிரி தேர்தலை சந்திப்பாரா விஜய்!
சென்னை: என்னதான் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையை எட்டவில்லை. எனவே மற்ற கட்சிகளுடன் கூட்டணிக்கு பேசி வருகிறது. ஒருவேளை பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த முடிவை விஜய் எடுக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
கடந்த 2013-ல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாஜக: 31 இடங்கள்
ஆம் ஆத்மி (AAP): 28 இடங்கள்
காங்கிரஸ்: 8 இடங்கள்
அப்போது, காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக முதலமைச்சரானார். கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தவுடன் தனது முக்கிய வாக்குறுதியான ஜன் லோக்பால் மசோதாவை (ஊழல் எதிர்ப்புச் சட்டம்) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கவில்லை.
மசோதாவை நிறைவேற்ற முடியாததால், கொள்கை ரீதியாகப் பதவி விலகுவதாகக் கூறி, ஆட்சியில் அமர்ந்த 49-வது நாளில் (2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி) தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த பிறகு, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சுமார் ஒரு வருடம் கழித்து, 2015 பிப்ரவரியில் மீண்டும் பொதுத்தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் மக்களிடம் சென்று மீண்டும் ஆணை கேட்போம் என கெஜ்ரிவால் களம் இறங்கினார். முடிவில், டெல்லியின் 70 இடங்களில் 67 இடங்களை வென்று இமாலயப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
இதேபோல இப்போது விஜய்யின் நிலைமை இருக்கிறது. தவெக ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை. எனவே காங்கிரஸ், இடதுசாரிகளிடம் விஜய் கோரிக்கை வைத்திருக்கிறார்.
காங்கிரஸ் ஆதரவளிக்க முன் வந்திருக்கிறது. இடதுசாரிகள் வரவில்லை. எனவே, விஜய்க்கு சிக்கல் நீடிக்கிறது. இப்படி பெரும்பான்மை நிரூபிக்காமல் போய்விட்டால் விஜய் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க வருவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications