வங்கக்கடலில் பலமடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இன்று மாலை முதல் மழை வெளுக்கும்: வானிலை ஆய்வு மையம்
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகத்தில் இன்று மாலை முதல், அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று மதியம், நிருபர்களுக்கு பேட்டியளித்த பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து, மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 20ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் நிலைகொள்ளும்.

இன்று மாலை
அப்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. இன்று மாலை முதலே தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். படிப்படியாக அடுத்தடுத்த நாட்களில் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மாநில கடலோர பகுதிகளில் அதிலும் குறிப்பாக, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீன் பிடிக்க செல்ல வேண்டாம்
மீனவர்கள் வரும் நவம்பர் 20 மற்றும் 21ம் தேதி வரை வங்க கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையை பொறுத்த அளவில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோரப்பகுதிகளில் ஆரம்பித்த இந்த மழை பிற மாவட்டங்களுக்கும் செல்லும்.

கூடுமா மழை அளவு
தமிழகத்தில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 20ம் தேதிவரை பெய்த மழை அளவு இயல்பை விட 20 சதவீதம் குறைவாகும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்த மழை பற்றாக்குறையை நீக்குமா என பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இதுவரை தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications