சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனைக்கு அல்வா கொடுத்த சௌமியா.. பல லட்சம் பணம்.. சிக்கியது எப்படி?
சென்னை: சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் செலுத்திய கட்டணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்றி ரூ.52 லட்சம் கையாடல் செய்த பெண் காசாளர் சௌமியா என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் செலுத்திய கட்டணத்தை எப்படி தன் கணக்கிற்கு சௌமியா மாற்றினார். அவரை எப்படி மருத்துவமனை நிர்வாகம் கண்டுபிடித்தது.. சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
சென்னை மெட்ரோஜோன் அடுக்குமாடியில் 47 வயதாகும் டாக்டர் மைதிலி, அவரது கணவர் பாலானி ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் டாக்டர்களாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் ஆபீசர் காலனியில் கடந்த 9 ஆண்டுகளாக தனியாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்கள்

இந்நிலையில் மைதிலி நடத்தும் மருத்துவமனையில், கடந்த 2021-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், குடவாசல் அடுத்த விக்கிவாண்டியம் பகுதியை சேர்ந்த 24 வயதாகும் சௌமியா என்ற பெண் கேசியராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இதனிடையே மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பணம் கட்டிய பின்னரும் பணம் மருத்துவமனையின் கணக்கிற்கு போகவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக நோயாளிகள், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். தொடர்ந்து புகார்கள் வந்ததால் சந்தேகமடைந்த டாக்டர் மைதிலி மருத்துவமனையின் கணக்குகளை சரி பார்த்தபோது, ஊழியர் சவுமியா நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் பணத்துக்கு சரியான கணக்கு வரவு வைக்காமல் பெறப்பட்ட பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்பியதை கண்டு அதிர்ந்து போனார்.
இப்படி சிறுக சிறுக மாற்றியதன் மூலம், கேசியர் சௌமியா சுமார் ரூ.52 லட்சத்து 24 ஆயிரத்து 35 பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் மைதிலி ஆவடி காவல் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில்,ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை கண்ணம்மாபேட்டை, சி.ஐ.டி. நகரில் வசித்து வந்த சௌமியாவை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications