வீடு அலாட் ஆகிடுச்சு.. 6 லட்சம் கொடுங்க.. 19 பேரை ஏமாற்றி பணத்தை ‘அபேஸ்’ செய்த இளம்பெண் கைது!
சென்னை : குடிசை மாற்று வாரியத்தில் வீடு பெற்றுத் தருவதாகக் கூறி 19 பேரிடம் இருந்து ரூ.36 லட்சம் பணத்தை மோசடி செய்த பிரியா என்ற இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்துார் சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி அருணா (36). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தரி என்பவர் வாயிலாக, கடந்த 2020ஆம் ஆண்டு அம்பத்துார், டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பிரியா என்ற எமிமா (30) அறிமுகமாகியுள்ளார்.

அப்போது பிரியா, அருணாவிடம், தான் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிவதாக கூறியுள்ளார். இருவரும் நன்கு பழகிய நிலையில், குடிசை மாற்று வாரியம் வாயிலாக சொந்த வீடு வாங்கிக் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அருணாவிடம் 30 ஆயிரம் ரூபாய் முன் பணம் பெற்றுள்ளார்.
அதன் பிறகு, வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, 6 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அருணாவும், அவரிடம் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். அத்துடன் அதே பகுதியில் உள்ள மேலும் 18 பேரிடமும் இதுபோல் வீடு வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.30 லட்சம் வரை பிரியா வாங்கி உள்ளார்.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆவணத்தை யாருக்குமே அளிக்காததால், அருணா உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.
பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிய பிரியா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 6ஆம் தேதி அம்பத்துார் போலீசில் புகார் அளித்த நிலையில், பிரியா தலைமறைவானார். இந்நிலையில், நேற்று மதியம் அவரை, அம்பத்துார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications