சென்னையைக் கலக்கும் பிங்க் கலர் தோழி.. முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தும் பெண்கள்!
சென்னை: இந்த 'திராவிட மாடல்' ஆட்சி மகளிருக்குப் பலவழிகளில் மரியாதை அளித்துவருகிறது. பெண்கள் பணிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை இலவசப் பயணம் எனக் கூறாமல், 'விடியல் பயணம் திட்டம்' என்று சொல்லும் அளவுக்கு அதன் மதிப்பை உயர்த்தி வழங்கி இருந்தார்.
அடுத்ததாக அறிமுகமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட'த்தைக் கூட 'உதவித் தொகை' என்று சொல்லாமல் 'உரிமைத் தொகை' என்று அடையாளப்படுத்தி இருந்தார். அதன் தொடர்ச்சியாக மகளிர் நலன் மீது அக்கறைகாட்டும் விதமாக, 'பிங்க் கலரில் ஒரு தோழி'யை சென்னை மாநகரில் வலம்வரச் செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அது என்ன 'பிங்க் கலர் தோழி' என்கிறீர்களா? கட்டாயம் அதைப்பற்றிய விரிவாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
என்னதான் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்று நாம் சொல்லிக் கொண்டாலும், அந்த நகரத்தில் இன்னும் மேம்படுத்த வேண்டிய அடிப்படைவசதிகள் பல இருக்கவே செய்கின்றன. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சென்னை நகரில் எந்தவிதமான முன்னேற்ற பணிகளும் நடைபெறவில்லை என்பது உலகத்திற்கே தெரிந்த விசயம்தான்.

குறிப்பாக, சென்னையில் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள் நிம்மதியாக உட்கார்ந்துகொள்ள நிழற்குடைகளே இல்லை. அடுத்து பலமணிநேரம் பயணம் செய்யும் பெண்கள் தங்களின் இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க, கழிப்பறை வசதிகளே இல்லை.
வீட்டிலிருந்து வெளியே புறப்படும் ஒரு பெண் தன் அலுவலகத்தை அடையும் வரை எந்த இயற்கை உபாதைகளையும் இடையில் எங்கேயும் நிறைவேற்றிக் கொள்ளவே முடியாது. மீண்டும் வீடு திரும்பும் வரை இதே நிலைதான். அதை எல்லாம் மனப்பூர்வமாக உணர்ந்து, அவர்களின் நலனில் கடந்தகால அரசு அக்கறை எடுத்துக்கொள்ளவே இல்லை.

ஆனால், தற்போதைய அரசு மகளிர் மனங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட்டு வருவதற்குச் சரியான சாட்சியாகச் சென்னை நகரில் பெண்கள் தங்களின் இயற்கை உபாதைகளை மேற்கொள்ள 'நடமாடும் ஒப்பனை அறைகளை' ஏற்படுத்தித் தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அந்த நடமாடும் ஒப்பனை அறைகள் பெண்களுக்குப் பிடித்த பிங்க் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் முன்பே 'பிங்க் கலர் தோழி' எனக் குறிப்பிட்டோம்.

சென்னையில் 800க்கும் மேற்பட்ட பொதுக் கழிப்பறைகள் உள்ளன. இதைத் தவிர 200 எலெக்ட்ரானிக் கழிப்பறைகளும் உள்ளன. நவீன வடிவத்தில் 250 'ஒப்பனை அறைகள்' கூட இந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு அவை செயல்பாட்டில் உள்ளன.
இப்போது புதிய வரவாக 'ஷீ டாய்லெட் என்ற பெயரில் நடமாடும் கழிப்பறைகளைச் சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ 4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார்.

இந்த ஒப்பனை அறை வானம் ஒன்றின் விலை ரூ 29.13 லட்சம். இவை டெல்லியில் தயாரிக்கப்பட்டு, சென்னை வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு வாகனத்தில் 4 கழிவறைகள் உள்ளன.
அதில் 3 இந்தியன் டாய்லெட். ஒன்று வெஸ்டர்ன் டைப் கழிப்பறை. வாகனத்திற்குள் முகம் பார்க்கும் கண்ணாடி, கைகழுவத் தேவையான சானிடைசர் திரவம், உடை மாற்றிக் கொள்வதற்கான சின்ன அறை, மேலும் அரசின் திட்டங்களை விளக்கிக் காட்டும் எல்இடி திரைக்காட்சி எனப் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தேவையான தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கான ஆயிரம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதைப்போல் பயன்படுத்தும் கழிவுநீரைச் சேமிக்க ஒரு தொட்டியும் உள்ளது. அது நிரம்பிவிட்டால், கழிவுநீர் வெளியேற்றும் மையங்களுக்குக் கொண்டு சென்று வெளியேற்றிவிட்டு, மீண்டும் வாகனம் சுற்றுக்கு விடப்படும்.
இந்தப் புதிய வரவான ஷீ டாய்லெட்ஸ் குறித்து மகளிர் என்ன சொல்கிறார்கள்?

"பிரபலமான தனியார் ஹோட்டலில் பணி செய்துவரும் பெண் ஊழியர் ஒருவர், "எங்களது ஹோட்டலில் உள்ள கழிப்பறை எங்களுக்கு வசதியாகவே இல்லை. ஆனால், இந்த 'ஷீ டாய்லெட்' மிகச் சிறப்பாக உள்ளது. பயன்படுத்தவும் பிடித்துள்ளது.
இதை எல்லாம் யோசித்து நம்ம முதல்வர் ஸ்டாலின் செய்வதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதற்குக் கட்டாயம் நான் நன்றி சொல்கிறேன்" என்கிறார்.

மற்றொரு பெண் ஒருவர் மாநகராட்சி மிகச் சிறப்பாக இந்த வசதியைச் செய்து கொடுத்துள்ளது. பார்க்கவே தூய்மையாக உள்ளது. பிடித்தும் உள்ளது என்கிறார்.
இவர் தினம் கூலி வேலைக்குச் சென்றுவருபவர். பலநேரங்களில் தெருக்களில் நடந்துகொண்டிருக்கும்போது இயற்கை உபாதைகள் ஏற்படும். அதைப் போக்க இடம் கிடக்காமல் தவிப்போம். யாரிடமும் போய் உதவி கேட்க முடியாது.

ஆண்களாக இருந்தால் எப்படியும் நடந்துகொள்ள முடியும். பெண்களுக்கு அந்த வசதிகள் இல்லை. இப்படி எல்லா, யோசித்து மக்களுக்குப் பயன்படும்விதமான திட்டங்களைத்தான் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்.
இந்த ஷீ டாய்லெட் ஒரே இடத்தில் இருக்காது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கும். அதனால், பல பகுதிகள் பலனடையும். பலதர மக்கள் ஒரே நேரத்தில் பலன் பெறுவர்.

ஒரே இடத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் அந்தமாதிரி பலனளிப்பதில்லை. பல கழிப்பறைகள் கேட்பாரற்றுக் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது.
குறிப்பாக, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்களில் செய்யப்பட்ட கழிப்பறைகள் நோய் பரப்பும் கூடங்களாக மாறிப்போய் உள்ளன. அந்தவகையில் இந்த ஷீ டாய்லெட்கள் சிறப்பான திட்டம் என்கிறார் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்துவரும் பழ வியாபாரி ஒருவர்.

"இதுவரை தமிழ்நாட்டில் வேறு எங்கும் இந்த மாதிரியான கழிப்பறையைக் கொண்டுவரப்படவில்லை. சென்னை மாநகராட்சியில்தான் முதன்முதலாகக் கொண்டுவந்துள்ளோம். இவை எந்தளவுக்குப் பெண்களின் பயன்பாட்டுக்குப் பயன் உள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, தேவை எனில் மண்டலத்திற்கு 5 வாகனங்கள் என மேலும் விரிவுபடுத்த உள்ளோம்" என்கிறார் சென்னை மேயர் ப்ரியா.












Click it and Unblock the Notifications