சென்னை பெண்ணுக்கும் தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதா?.. மறுக்கிறார் கேஎம்சி டீன்!
மாங்காட்டை சேர்ந்த பெண்ணுக்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழ்நாட்டை கடந்த 3 நாட்களாக அதிர வைத்து கொண்டிருக்கும் செய்தி சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதுதான்.
தவறுதலாக ரத்தத்தை ஏற்றியதால், இதற்கு என்னை கொன்றே இருக்கலாமே என்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டி, ரத்ததானம் கொடுத்தவரின் தற்கொலை முயற்சி, மருத்துவர் குழு விசாரணை, நீதிமன்றமே முன்வந்து வழக்கு என இன்னமும் அந்த பரபரப்பு சம்பவம் அடங்கவில்லை.
மாங்காட்டு பெண்
அதற்குள் சென்னையில் மற்றொரு பெண்ணுக்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. மாங்காட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்திருக்கிறார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை
இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பிரசவம் நடந்திருக்கிறது. இதன் காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் பிரசவத்திற்குப் பின்னர் செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
எச்ஐவி தொற்று
இதனால் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றியது போல தனக்கும் ஏற்றப்பட்டது என்று கூறி பாதிக்கப்பட்ட பெண் இது சம்பந்தமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்தேன்
தனக்கு நேர்ந்த அநீதி குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளரிடம் ஏற்கனவே தான் புகார் அளித்தாகவும், ஆனால், அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்த பெண் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நியாயம் வேண்டும்
ரத்த வங்கி ஊழியர்கள் மெத்தனத்தால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது என்றும், தமிழக அரசுதான் தனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் மாங்காடு பெண் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
ஒதுக்கி வைத்தனர்
ஹெச்ஐவி தொற்றால் தனது அக்கா, அண்ணன் உள்பட நெருங்கிய உறவினங்களே ஒதுக்கி வைத்துள்ளதாக கூறிய பெண், நோய் தொற்றால் குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார். இப்படி தவறுதலாக ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட மற்றொரு சம்பவமும், பெண் அளித்த பகீர் புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரோ, பெண்ணின் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இப்போதுதான் தன் கவனத்திற்கு வருகிறது என்றும், ஏற்கனவே என் கவனத்திற்கு வந்து தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மறுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் குறித்து விசாரணை நடத்துகிறேன் என்றும் உறுதி அளித்தார்.
டீன் விஜயா விளக்கம்
இதனிடையே, எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக கூறும் பெண்ணுக்கு பாதிப்பு ஏதுமில்லை என மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் விஜயா சொல்லும்போது, "தங்கள் மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சையின்போது அளித்த ரத்தத்தில் எச்ஐவி தொற்று ஏதும் இல்லை. அதேபோல, மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனை செய்ததற்கும் ஆதாரமும் ஏதும் இல்லை" எனவும் டீன் விஜயா பதில் அளித்துள்ளார்.