"நோ என்ட்ரி" எங்களையே போக விட மாட்டியா? மாமல்லபுரத்தில் காவலாளியை அடித்து துவைத்த பெண்கள்
சென்னை: சென்னை மாமல்லபுரம் ஐந்து ரத பகுதிக்கு நோ என்ட்ரியில் வந்த காரை தடுத்து நிறுத்திய காவலாளியை 2 பெண்கள் உள்பட 4 பேர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எங்களையே போக விடமாட்டியா? என கூறியபடி பெண்கள் அந்த காவலாளியை பீப் வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை மெரினா லூப் சாலையில் மதுபோதையில் போலீசாரை தரக்குறைவாக பேசி தகராறு செய்த வேளச்சேரி சந்திரமோகன் மற்றும் அவரது தோழியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இந்த ஜோடி, போலீசாரை தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலான நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் நோ என்ட்ரி வழியாக செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்திய காவலாளியை, காரில் இருந்த இரு பெண்கள் அடித்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். புராதன சின்னங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட பள்ளி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினரும் இங்கு வருகை தருவதை பார்க்க முடியும். மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் வணிக வளாகம் உள்ளது. இதில் சுமார் 100 கடைகள் உள்ளன.
இந்த வணிக வளாகத்தை ஒட்டி கார் பார்க்கிங் உள்ளது. புதுநகர் வளர்ச்சிக் குழும கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாமல்லபுரத்தில், கார் பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக தினக்கூலி அடிப்படையில் காவலாளி ஒருவரை வணிகர்கள் பணியில் அமர்த்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், ஐந்து ரத பகுதிக்கு காரில் வந்த சிலர், நோ என்ட்ரி வழியாக செல்ல முயன்ற போது, அவர்களை அங்கு இருந்த காவலாளி ஏழுமலை என்பவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஆனால், காரை ஓட்டிவந்தவரோ நிற்காமல் முன்னே செல்ல முயன்றுள்ளார். இதன் காரணமாக காவலாளி ஏழுமலை காரில் இருந்தவர்களை திட்டியதாக சொல்லப்படுகிறது. உடனே, காரில் இருந்த பெண்கள், இறங்கி வந்து காவலாளியை சரமாரியாக தாக்கியுள்ளனர். தகாத வார்த்தையால் திட்டியதோடு இரு பெண்களும் காவலாளியை தாக்கியுள்ளனர். இதனால், காவலாளி திருப்பி தாக்கினாராம்.
இதையடுத்து காரில் இருந்த ஆண்களும், காவலாளியை பிடித்து தாக்கியுள்ளனர். எங்களையே தடுக்குறியா? யார் மேல கை வைக்கிற எனக் கேட்டு காரில் வந்த பெண்கள், காவலாளியை கடுமையாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், காவலாளி ஏழுமலை வைத்திருந்த லத்தியை பிடுங்கி அவரை சராமாரியாக தாக்கினர். காலால் உதைத்தும் அடித்து தாக்குவது போல் வீடியோ பதிவாகியுள்ளது.
காவலாளியை தாக்கிவிட்டு காரில் வந்த பெண்கள் உள்பட அனைவரும் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே, இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் சேர்ந்து பார்க்கிங் பகுதி ஊழியரை அடித்த சம்பவம் மாமல்லபுரம் ஐந்து ரத பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications