நாட்டிலேயே No 1.. மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.. மாஸ் காட்டிய கீதாஜீவன்.. சபாஷ்
சென்னை: மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது... கடந்த 2021 டிசம்பரில் மாநில மகளிர் வரைவு கொள்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டு கருத்து கேட்கப்பட்ட நிலையில், இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மாநில மகளிர் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2021 டிசம்பரில் மாநில மகளிர் வரைவு கொள்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டு கருத்து கேட்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் துவங்கியது.. விரைவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக வருவதாக தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, முதல்வரின் வெளிநாட்டு பயணம், திமுக இளைஞரணி கூட்டம், பிரதமரின் தமிழகம் வருகை, அடுத்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள், அதற்கான நிதிவிவகாரங்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலீடுகள்: மேலும், வரும் 28-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவிருக்கிறார்.. அவர் பிப்ரவரி முதல் வார இறுதியில்தான் தமிழகம் திரும்புகிறார். இப்படிப்பட்ட சூழலில், வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுபோலவே, தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.. முக்கியமாக, இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையிலான குழு இந்த கொள்கையை வடிவமைத்துள்ளது.
100 நாள் வேலை: இந்த மாநில மகளிர் கொள்கையில், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 33 சதவீத இடஒதுக்கீட்டை அரசு, தனியார் என அனைத்து இடங்களிலும் தீவிரமாக அமல்படுத்துவது, கிராமப்புறங்களில் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தை கூடுதலாக 50 நாட்கள் நீட்டிப்பது,
19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் , கல்வி இடைநிற்றல் காரணமாக படிப்பை நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடர வழிவகை செய்வது, அரசு தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது, அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி மாநில மகளிர் கொள்கை வெளியிடப்பட்டது.
பெருமிதம்: இப்படித்தான், கடந்த டிசம்பர் 2021ல், மாநில மகளிர் கொள்கை வெளியிடப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து விரிவான விவரங்கள் வெளியாகி இப்போது அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.. அதுமட்டுமல்ல, நாட்டிலேயே, மாநில அளவில் மகளிர் கொள்கை வகுத்த ஒரே மாநிலம் தமிழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து அமைச்சர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதுடன், அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அதன்படியே அனைவருமே பங்கேற்றிருந்தனர். ஆனால் வனத்துறை அமைச்சர் மதிவானன், உடல்நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications