''அண்ணி வணக்கம்ங்க''! துர்கா ஸ்டாலினை சூழ்ந்த திமுக மகளிரணியினர்! மகளிர் உரிமை மாநாடு ருசிகரம்!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள வந்த முதலமைச்சர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு, திமுக மகளிரணி நிர்வாகிகள் போட்டிப் போட்டுக்கொண்டு வணக்கம் சொன்னதை காண முடிந்தது.
கவுன்சிலர் முதல் பெண் அமைச்சர்கள் வரை துர்கா ஸ்டாலினை பார்த்ததும் நேராக அவரது இருக்கைக்கே சென்று வணக்கம் வைத்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் முதலமைச்சர் முக ஸ்டாலினின் சகோதரி செல்விக்கும் திமுக மகளிரணி நிர்வாகிகள் அவரது இருக்கைக்கே தேடி வந்து வணக்கம் சொல்லிவிட்டு சென்றனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக மகளிர் உரிமை மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. அதில் மாநாட்டு மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை தவிர துரைமுருகன் உட்பட வேறு எந்த நிர்வாகிகளுக்கும் அனுமதி தரப்படவில்லை. முழுக்க முழுக்க பெண் தலைவர்கள் மட்டுமே மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தருவதற்கு முன்பே தனியாக ஆரவாரமின்றி மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்த துர்கா ஸ்டாலின், முதல் வரிசையில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர தயங்கியவாறு இரண்டாவது வரிசையில் இருந்த சோஃபாவில் அமர முயன்றார். அப்போது அங்கிருந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., விஜயா தாயன்பன், அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் துர்கா ஸ்டாலினை வலியுறுத்தி முதல் வரிசை சோஃபாவில் அமர வைத்தனர்.
துர்கா ஸ்டாலின் சோஃபாவில் அமர்ந்தது தான் தாமதம், திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கும்பலாக அவர் முன்னால் கூடிவிட்டனர். எத்தனை பேருக்கு தான் வணக்கம் வைப்பது என்ற தர்ம சங்கடத்திற்கு தள்ளப்பட்டார் துர்கா ஸ்டாலின். இதனிடையே இருக்கைகளை ஒழுங்குப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் மா.சுப்ரமணியன், மகளிர் அணி நிர்வாகிகள் திடீரென இருக்கைகளில் இருந்து எழுந்து கலைந்ததால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தார்.
அதேபோல் செல்விக்கு வணக்கம் வைப்பதற்காக திமுக மகளிர் அணி நிர்வாகிகள் போட்டி போட்டனர். இதனிடையே தனது அண்ணியையும், அக்காவையும் வரவேற்க அவர்களது இருக்கைகள் அருகே சென்ற கனிமொழி, இருவர் வருகைக்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications