அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு! அறிவாலயத்தில் நடந்த டிஸ்கஷன்! பம்பரமாக சுழலும் கனிமொழி!
சென்னை: அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் குறியாக உள்ள கனிமொழி எம்.பி., மாநாடு தொடர்பான பணிகளில் பம்பரமாக சுழன்று வருகிறார்.
அரசு வேலைவாய்ப்பிலும் - உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை முதலமைச்சராக இருந்த போது சட்டமாக்கியவர் கருணாநிதி. இதனால் தான் அவரது நூற்றாண்டை பெருமைப்படுத்தும் நோக்கில் இத்தகைய மாநாடுக்கு கனிமொழி ஏற்பாடு செய்துள்ளார்.

மகளிர் உரிமை மாநாட்டில் அகில இந்திய அளவிலான முக்கியத் பெண் தலைவர்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி மாநாடு மேடை வரை பார்த்து பார்த்து யோசனைகள் வழங்கி வருகிறார் கனிமொழி.
கலைஞர் நூற்றாண்டையொட்டி, திமுக மகளிர் அணி முன்னெடுக்கும் 'மகளிர் உரிமை மாநாடு' ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 14ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. மாநாடுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால், அது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் நடத்திய கனிமொழி, அமைச்சர் தாமோ அன்பரசனுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடல் இந்த மாநாட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்", "பெண்களுக்குக் கட்டணமில்லா பயணத் திட்டம்", "புதுமைப் பெண் திட்டம்", "மகளிர் சுய உதவிக் குழுக்கள்", "மகளிரை அர்ச்சகராக்கியது" என திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைத் திட்டங்கள் பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும் எனத் தெரிகிறது.
கனிமொழியின் அழைப்பை ஏற்று திமுக மகளிர் உரிமை மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே, சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்திய பெண் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
இதனிடையே மகளிர் உரிமை மாநாட்டை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications