Wonderla; ஊரே வியக்க போகுது.. சென்னை வொண்டர்லா எப்போது திறக்கப்படும்.! மொத்தம் எத்தனை ரைட்கள்! வெளியான தகவல்
சென்னை: சென்னை அடுத்துள்ள இல்லலூர் கிராமத்தில் பிரம்மாண்டமாக வொண்டர்லா பூங்கா அமையவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் படுதீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட இங்கு அமையும் நாட்டின் மிகப் பெரிய ரோலர் கோஸ்டர் சோதனை ஓட்டம் நடந்தது. இதற்கிடையே இந்த பூங்கா எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
இந்தியாவின் உள்ள முக்கியமான கேளிக்கை பூங்காக்களில் வொண்டர்லா பார்க் அமைந்துள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கும் வொண்டர்லா இந்தியாவின் முன்னணி கேளிக்கை பூங்காவாக இருக்கிறது. இப்போது இந்தியாவில் கொச்சி, ஹைதராபாத், பெங்களூர், புவனேஷ்வர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

வொண்டர்லா பூங்கா
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட பூங்காவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே மக்களிடம் இருந்தது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. இருப்பினும், சில பல காரணங்களால் அதில் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்தச் சூழலில் தான் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023ம் ஆண்டு இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டில் உள்ள திருப்போரூர் இல்லலூர் கிராமத்தில் 62 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மொத்தம் எத்தனை ரைட்கள்
62 ஏக்கர் பரப்பளவில் ரூ. 515 கோடி மதிப்பில் இந்த பூங்கா திறக்கப்படுகிறது. இதில் 16 வாட்டர் ரைட்கள் உட்பட மொத்தம் 42 ரைட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் மிக பெரிய ரோலர் கோஸ்டரும் இங்கு தான் அமைகிறது. சமீபத்தில் தான் இந்த ரோலர் கோஸ்டர் பொருத்தும் பணிகள் நிறைவடைந்தது. அந்த ரோலர் கோஸ்டரின் சோதனை ஓட்டமும் கூட சமீபத்தில் நடந்தது. அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி இருந்தது.
மேலும், இப்போது வாட்டர் ரைட், இதர லேண்ட் ரைட்களை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படுவேகமாக கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டுமான பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து முழுமையான பாதுகாப்பு சோதனைகளும் நடத்தப்படும். அதன் பிறகே பூங்கா மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்.
எப்போது திறக்கப்படும்
வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் பூங்காவைத் திறக்க வொண்டர்லா நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் டிசம்பர் மாதம் ஒரு நீண்ட விடுமுறை வரும். பல ஐடி ஊழியர்களுக்கும் அப்போது விடுமுறை காலகட்டமாக இருக்கும். எனவே அதை இலக்காக வைத்தே டிசம்பரில் பூங்காவைத் திறக்க முடிவு செய்துள்ளனர்.
உள்ளாட்சி வரி
மேலும், தமிழ்நாடு அரசுடன் கடந்த 2023ல் ஒப்பந்தம் போட்ட போதே, 2025 தொடக்கத்தில் பூங்காவைத் திறக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. அப்படித் திறக்கப்பட்டால் மட்டுமே 10 ஆண்டுகள் உள்ளாட்சி வரி (local body tax) விலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. கட்டுமான பணிகள் தாமதம் ஆனதால் ஆறு மாதங்கள் மட்டுமே அது நீடிக்கப்பட்டது. எனவே, இந்தாண்டு இறுதிக்குள் பூங்காவைத் திறந்தால் தான் உள்ளாட்சி வரி விலக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்குக் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications